வங்கக் கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு..5 நாளைக்கு மிதமான மழை..ரெயின் கோட் ரெடியா?
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதன் காரணமாக ஜனவரி 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு,புதுச்சேரியில் ஜனவரி 30ஆம் தேதி வரைக்கும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் முன்னதாகவே பனியின் தாக்கம் அதிகரித்து விட்டது. நீலகிரி, கோவை, கொடைக்கானல் பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. பகலில் வெயிலடித்தாலும் குளிர்காற்று வீசியதால் மக்கள் அதிக அளவில் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கினர்.
இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. பல ஊர்களில் சாரல் மழையும் தென் மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்தது. இந்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் நல்ல மழை இருக்கு.. எந்த மாவட்டங்களில் தெரியுமா! வானிலை மையம் தகவல்
ஜனவரி 28 முதல் ஜனவரி 30ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தை மாதத்தில் பொதுவாக மழை குறைவாகவே இருக்கும் வறண்ட வானிலை நிலவும். கடந்த ஆண்டு தை மாதம் இறுதி வரைக்குமே மழை பெய்தது. இந்த ஆண்டு தை பிறந்து 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்கியுள்ளது.
மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், இன்று முதல் 28ஆம் தேதி வரைக்கும் நிலநடுக்கோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல் - தென்கிழக்கு வங்கக்கடலில் பலத்த சூறாவளி வீசும். ஜனவரி 29, 30 தேதிகளில் இலங்கையை ஒட்டிய தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 40 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.