ஒரே மாதத்தில் 2வது முறை.. உச்சம் தொட்டது கேஸ் சிலிண்டர் விலை.. மீண்டும் விலை ஏற்றம்.. அதிர்ச்சி!
சென்னை: நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலை 43 நாட்களாக உயர்த்தப்படாத நிலையில் தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 43வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்று ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தால் இன்னொரு பக்கம் கேஸ் சிலிண்டர் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.
இப்போதெல்லாம் மாதம் மாதம் கேஸ் சிலிண்டர் விலை உயர்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், மார்ச் மாதங்களில் கேஸ் சிலிண்டர் விலை திடீரென உச்சம் தொட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. பின்னர் மார்ச் மாதம் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இந்த மாதமும் கடந்த 7ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மேலும் 3 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 965 ரூபாய் இருந்தது. இந்த மாதம் 1000ஐ தாண்டி உள்ளது.
போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ. 1,018க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது. பொதுவாகவே வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை அதிகமாக இருக்கும். அதேபோல் இதன் விலையும் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட இரண்டு முறை உயர்த்தப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மக்கள் இடையே இந்த விலை ஏற்றம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விலை உயர்வதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். முக்கியமாக வணிக சிலிண்டர் விலை உயர்வதால் ஹோட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டீ தொடங்கி சாப்பாடு வரை அனைத்தின் விலையும் வரும் நாட்களில் உயர்வும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுக்க பல்வேறு பொருட்களின் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. சில்லறை வர்த்தக பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.