பெரிய இரும்பு வாகனம் வருது! எல்லோரும் ஓடுங்க.. சென்னை ராயபுரம்-ஆற்காடு முதல் ரயிலின் ‛பிளாஷ்பேக்’
சென்னை: ஆகஸ்ட் 22ம் தேதி ‛மெட்ராஸ் டே' கொண்டாடப்பட உள்ள நிலையில் தென்இந்தியாவில் முதல் முறையாக சென்னையின் ராயபுரத்தில் இருந்து ஆற்காடு இடையே முதல் முதலாக ரயில் இயக்கிய பெருமைமிகு வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியாகும்.
Recommended Video
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் முக்கியமானதாக சென்னை மாறியுள்ளது. மருத்துவ துறை, உள்கட்டமைப்பு உள்பட மக்களுக்கு தேவையான பல்வேறு துறைகளில் முன்னேறி இன்று முன்னிலையில் தனித்துவமாக உள்ளது. இது இன்று மட்டுமல்ல.. சென்னை முன்காலத்தில் இருந்தே தனித்துவமாகவே இருந்து வந்துள்ளது.
ஏனென்றால் தற்போது கர்நாடகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் என 5 மாநிலங்களாக உள்ள அனைத்தும் அன்று இருந்த ஒரே அடையாளம் என்றால் அது சென்னை எனும் ‛மதராஸ்' அல்லது ‛மெட்ராஸ்' என்பது தான். இத்தகைய பெருமை வாய்ந்த மெட்ராஸ் தினம் தான் ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
சென்னை தினம்! எம்டன் கப்பல் பொழிந்த குண்டு மழை.. பின்னணியில் செம்பகராமன் பிள்ளை! சுவாரஸ்ய பின்னணி
தென்இந்தியாவின் முதல் ரயில்
தற்போதைய காலத்தில் சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில்கள் ஓடினாலும் கூட தென் இந்தியாவிலேயே முதல் முதலாக ரயில் சேவை துவங்கப்பட்ட நகரம் என்றால் அது சென்னை தான். இதற்காக சென்னையில் ராயபுரத்தில் தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து தான் ஆற்காடு வரை தென்னிந்தியாவின் முதல் ரயில் இயங்கியது.
ராயபுரத்தில் ரயில் நிலையம்
சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். இதனால் தென்னிந்தியாவில் ரயில்களை இயக்குவது குறித்து லண்டனில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து 1845ல் ஆண்டு ‘மெட்ராஸ் ரயில்வே கம்பெனி' தொடங்கி ரயில் பாதை பணி, ரயில் நிலைய பணிகள் துவக்கப்பட்டது. தலைமை ரயில் நிலையமாக அமைக்க இதற்காக தேர்வு செய்யப்ட்ட இடம் தான் ராயபுரம். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களின் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகே இருந்ததால் தான் ரயில் நிலையம் அமைக்க ராயபுரம் தேர்வானது.
பணிகள் முடிந்து திறப்பு விழா
1953ல் முதல் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மேலும் ராயபுரத்தில் இருந்து ஆற்காட்டுக்கு 60 மைல் (97 கிலோமீட்டர்) தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. முழுவதுமாக பணி முடிவடைந்த நிலையில் மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸால் 1856, ஜூன் 28ந் தேதி ரயில் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
தென்னிந்தியாவின் முதல் ரயில்
இதையடுத்து தென்இந்தியாவின் போக்குவரத்து துறையின் புதிய சகாப்தமாக ஜூலை 1ந் தேதி ராயபுரம்-ஆற்காடு இடையே பயணிகள் ரயில் இயங்க துவங்கியது. அதே நாளில், ராயபுரத்தில் இருந்து திருவள்ளூருக்கு மேலும் ஒரு ரயில் இயக்கப்பட்டது. முன்னதாக முதல் முதலாக பச்சை கொடி அசைத்து ராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து ஆற்காடு நவாப்பின் தலைமையிடமாக இருந்த ஆற்காடு நோக்கி சென்ற இந்த ரயிலில் ஆளுநர் ஹாரிஸ் உள்பட 300 பேர் பயணித்தனர். ராயபுரத்தில் புறப்பட்ட ரயிலுக்கு ஆம்பூர் சென்ற ரயிலுக்கு துப்பாக்கி குண்டு, பேண்டு வாத்தியங்களும் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் திரண்டு ரயில்களுக்கு பூஜை செய்து ஆரவாரம் செய்தனர்.
பெரிய இரும்பு வாகனம்
தென்இந்தியாவின் முதல் ரயில் பயணம் குறித்து லண்டன் பத்திரிகையான The Illustrated London News செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், ‛‛ராயபுரம்-ஆற்காடு இடையே தென்இந்தியாவின் முதல் ரயில் இயக்கப்பட்டது. கிராமங்கள் வாயிலாக இயங்கிய இந்த ரயிலை மக்கள் பயம் கலந்த ஆச்சரியத்தோடு பார்த்தனர். வயலில் வேலை செய்தவர்கள், மாடு மேய்த்தவர்கள் என அனைவரும் மிகப்பெரிய இரும்பு வாகனம் தங்களை நோக்கி வருவதாக நினைத்து மிரண்டு ஓடினார்கள்'' என கூறப்பட்டுள்ளது. இந்த பெருமையான தருணத்துக்கு முக்கிய காரணம் மெட்ராஸ் ரயில்வே கம்பெனியும், சிம்சன் கம்பெனியும் தான் காரணம். மெட்ராஸ் ரயில்வே கம்பெனி ரயில் பாதை, ரயில் நிலைய பணிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமை இழக்கும் ராயபுரம்
தென்இந்தியாவில் முதல் முதலாக பிரமாண்டமாக கட்டப்பட்ட ராயபுரம் ரயில் நிலையம் தற்போது 166வது ஆண்டு விழாவை கொண்டாடி பழமையான பாரம்பரிய ரயில் நிலையமாக நிமிர்ந்து உள்ளது. ராயபுரம் ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு 17 ஆண்டுகளுக்கு பிறகு 1873ல் தான் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. அதன்பிறகு வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இருந்தும், தெற்கு நோக்கி சென்ற ரயில்கள் ராயபுரத்தில் இருந்தும் புறப்பட்டு சென்றது. இதற்கிடையே கடல்சார் போக்குவரத்து அதிகமானது. ராயபுரம் ரயில் நிலையத்துக்கு அதிகளவில் சரக்கு போக்குவரத்து வந்த நிலையில் கூட்ட நெரிசல், சிரமத்தை தவிர்க்கும் நோக்கில் தான் எழும்பூர் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து தெற்கு நோக்கி செல்லும் பயணிகள் ரயில்கள் எழும்பூர் நிலையத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் தான் தற்போது ராயபுரம் ரயில் நிலையம் மெல்ல மெல்ல தனது பெருமையை இழக்க தொடங்கி இன்று பலருக்கும் தெரியாத நிலையில் உள்ளது என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.