"தரமற்ற பால் விற்கப்படுகிறது" - ராஜேந்திர பாலாஜி கூறிய புகார்.. வழக்கை வாபஸ் பெற்ற பால் நிறுவனங்கள்
சென்னை: தரமற்ற பால் விற்கப்படுவதாக முன்னாள் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய விவகாரத்தில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாக தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அவை தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற அனுமதித்துள்ளது.
தனியார் பால் நிறுவனங்களின் பால் தரம் குறைந்ததாக உள்ளதாகவும், இதை குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும் அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்திருந்தார். பால்வளத்துறை அமைச்சரே இப்படி பகிரங்கமாக பேசியது அன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, தங்கள் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு தடைவிதிக்கக் கோரியும், தங்கள் நிறுவனத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரியும் ஹட்சன் ஆக்ரோ, டோட்லா, விஜய் டெய்ரீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் இருப்பதாக ஆதாரம் இல்லாமல் பேச ராஜேந்திரபாலாஜிக்கு தடை விதித்திருந்தார். அதன் பின்னர், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, ராஜேந்திர பாலாஜி உடனான பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இருப்பதாக பால் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்குகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பால் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications