மனைவி பெயரில் 25 சொத்துக்கள்.. சொகுசு கார்.. நீதிபதிக்கு கட்டாய ஓய்வை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்
சென்னை: கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ். குணசேகர், சில குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மனைவி வாங்கிய சொத்துக்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்காத காரணத்தால் இவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இந்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது
எஸ். குணசேகர் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக இருந்தார். ஆனால் சில குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே அதே நாளில் விருப்ப ஓய்வு கேட்டு குணசேகர் அளித்த விண்ணப்பத்தை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

அவருக்கு எதிராக குற்றக் குறிப்பாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் 58 வயதை பூர்த்தி செய்ததால், 60 வயது வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய குழு முடிவு செய்தது. மேலும் அவருக்கு கட்டாய ஓய்வு வழங்க முடிவு செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த முடிவுக்கு உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கொண்ட குழு, ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மாவட்ட நீதிபதி குணசேகருக்கு கட்டாய ஓய்வு அளித்து தமிழ்நாடு அரசு 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி குணசேகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள் முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் நீதிபதி குணசேகர் ஆஜராகி, ''தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் படி, அரசு ஊழியரின் வருவாய் ஆதாரத்தில் இருந்து இல்லாமல் அவரது குடும்பத்தினர் வாங்கிய சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை... எனவே குடும்பத்தினர் வாங்கிய சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற சுற்றறிக்கை, அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு முரணாக உள்ளது.. எனவே தனக்கு கட்டாய ஓய்வு அளித்த உத்தரவை ரத்து செய்து, உரிய பணப் பலன்களுடன் விருப்ப ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அப்போது உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் வாதிடுகையில், நீதிமன்ற ஊழியர்களை மோசமாக நடத்தியது, மனைவி பெயரில் 25 அசையா சொத்துக்கள் வாங்கியது, பி.எம்.டபிள்யூ சொகுசு கார் வாங்கிய விவரங்களை குணசேகர் உயர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை. அவரது சம்பளக் கணக்கில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பெருந்தொகை வரவு வைக்கப்பட்டுடிருக்கிறது. பொது நலனை கருதி, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை அதிகாரியான மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். நீதித்துறை அதிகாரியை, அரசு ஊழியர்களைப் போல கருத முடியாது. நீதித்துறை அதிகாரிகள் உச்சபட்ச நேர்மையை கொண்டிருக்க வேண்டும். அதனால் உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு முடிவில் தலையிட முடியாது எனக் கூறியது, முன்னாள் நீதிபதி குணசேகரன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications