காந்தியடிகளின் 75ஆவது நினைவு தினம்: தமிழக ஆளுநர், முதல்வர் மலர்த் தூவி மரியாதை
சென்னை: மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தியின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் தியாகிகள் தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில் உத்தமர் காந்தியடிகளின் 75-வது நினைவு நாளானது தேச அளவில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ந்தேதி "தியாகிகள் தினம்" ஆக அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் சாதிய பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்றுரைத்திட்ட அண்ணலின் நினைவாக தீண்டாமை உறுதிமொழியும் மேற்கொள்ளப்படுகிறது.
இதனை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகளின் உருவச்சிலைக்கு கீழ்வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
Recommended Video
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் காந்தியின் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அது போல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்தார். தமிழக ஆளுநரின் வருகையையொட்டி காமராஜர் சாலை, கடற்கரை சாலை, ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications