மநீமவில் இருந்து சிகே குமரவேல் விலகல்.. தனிமனித பிம்பமே காரணம்.. கமலுக்கு ஓபன் லெட்டர்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சிகே குமரவேல் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகி உள்ளார். இது தொடர்பாக அவர் கமல்ஹாசனுக்கு கடிதம் எழுதி உள்ளார். தனிமனித பிம்பத்தை சார்ந்து இருக்கிற அரசியலை விடவும் மதச்சார்பற்ற ஜனநாயக பாதையில் பயணிக்க விரும்புகிறேன் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், மற்றும் முக்கிய நிர்வாகிகளான தங்கவேல், மௌரியா ஐஏஎஸ், உமாதேவி, உள்ளிட்ட பலர் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சிகே குமரவேல், கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் இன்று விலகி உள்ளார். இது தொடர்பாக பகிரங்கமாக கமலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
எதிர்பார்ப்பு அதிகம்
அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது: 2019ல் மக்கள் நீதி மய்த்தில் இருநது விலகி போனாலும், தமிழகத்தில் உங்களாலும் மக்கள் நீதி மய்யத்தாலும் மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் மீண்டும் இணைந்தேன், மக்கள் இடத்திலும் அந்த மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக இருந்தது.
நம்பிக்கை பிரகாசம்
கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் கட்சியின் நடவடிக்கைகளாலும், உங்களுடைய சூறாவளி சுற்றுப்பயணத்தாலும் மக்களிடையே மய்யத்தின் மீதான வரவேற்பும் நம்பிக்கையம் அதிகரித்ததை நான் கண்கூடாக பார்க்க முடிந்தது. அதை தொடர்ந்து மய்யத்திற்கு டார்ச்லைட் சின்னம் மீண்டும் கிடைத்த போதும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்த போதும், மக்கள் நீதி மய்யத்தின் மீதான அந்த நம்பிக்கையம் எதிர்பார்ப்பும் மேலும் பிரகாசமானது.
வெற்றி பெறமுடியவில்லை
ஆனால் இன்று நமக்கான வாய்ப்புகளை நாம் இழந்துவிட்டோம். எதிர்க்கட்சியில் அமர வேண்டிய அத்தனை தகுதிகளும் நமக்கு இருந்த போதும், ஒரு தொகுதியில் கூட நம்மால் வெற்றி பெற முடியவில்லையே ஏன்?
தவறான வழிநடத்தல்
உங்களுடைய அரசியல் ஆலோசகர்களும் அவர்களுடைய தவறான வழிநடத்தலும் தான் காரணம். ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும் செயல்பாடுகளும் தான், மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் தகர்த்துவிட்டது.
பொறுப்பாளர்கள் குற்றச்சாட்டு
நமது தோல்விக்கான காரணங்களையும், காரணிகளையும் இதற்கு முன் விலகிய பொறுப்பாளர்கள் உங்கள் முன்னும், ஊடகங்கள் முன்னும் வைத்துவிட்டாரகள். அவர்கள் முன்வைத்த காரணங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
பதவி விலகுகிறேன்
வரலாறு படைப்பவர்களாக இருக்க வேண்டிய நாம், வரலாறு படிப்பவர்களாக மாறிவிட்டோமே என்கிற கோபமும் ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு. தனி மனித பிம்பத்தை மட்டும் சார்ந்து இருக்கிற அரசியலைவிடவும், மதசார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன். ஆகவே மக்கள் நீதி மய்யதின் அடிப்படை உறுப்பினர் என்கிற நிலையிலிருநது உடனடியாக விலகுகிறேன்" என்று கூறியுள்ளார்.