பட்டப்பகலில் டிஜிபி அலுவலகம் முன்பே.. ஜாகிங் போன பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்.. 'பரபர' வீடியோ
டிஜிபி அலுவலகம் என்பதால் பக்கத்தில் போலீஸ் வாகனம் ஏதாவது இருக்கும் என பார்த்தேன். ஆனால் அங்கு போலீஸ் வாகனம் ஏதும் இல்லை. இதனால் எதிரே இருந்த செக்யூரிட்டி போலீஸ்காரரை நோக்கி சென்றேன். அவனும் தைரியமாக என்னுடன் வந்தான்.
சென்னை: சென்னையில் பட்டப்பகலில் டிஜிபி அலுவலகம் முன்பே பெண் ஒருவரிடம் இளைஞர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வாக்கிங், ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்வது வழக்கம். அண்மைக்காலமாக பெண்களும் அதிக அளவில் இங்கு வந்து உடற்பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
இந்நிலையில், இன்று காலை மெரினா அருகே டிஜிபி அலுவலகம் முன்பு ஜாகிங் சென்ற பெண்ணிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அப்பெண் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
டிஜிபி அலுவலகம் முன்பு..
மெரினா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் தினமும் நான் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில், இன்று காலையும் அங்கு ஜாகிங் சென்று கொண்டிருந்தேன். இந்நிலையில், டிஜிபி அலுவலகம் முன்பு நான் வந்து கொண்டிருந்த போது, இரண்டு இளைஞர்கள் எனக்கு எதிரே வந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், என்னை பார்த்து மிக மோசமான முறையில் கமெண்ட் செய்தான். அதை கேட்டதும் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.
கொஞ்சம் கூட பயமில்லை
பின்னர் அவனை பார்த்து, "டேய் நில்லுடா" எனக் கூறினேன். அவனும் சிறிது கூட பயமில்லாமல் "என்ன?" என்று கேட்டான். அவன் போதையில் இருக்கிறான் என்பது மட்டும் எனக்கு தெரிந்தது. அப்போது நான், "உனக்கு தைரியம் இருந்தா இங்கேயே நில்லு.. உன் மாமனார், மாமியார் (போலீஸ்) இப்போ வருவாங்க.. வந்ததுக்கு அப்புறம் நாம பேசிக்கலாம்" எனக் கூறினேன். அவனும் பயமில்லாமல் நின்றான். டிஜிபி அலுவலகம் என்பதால் பக்கத்தில் போலீஸ் வாகனம் ஏதாவது இருக்கும் என பார்த்தேன். ஆனால் அங்கு போலீஸ் வாகனம் ஏதும் இல்லை. இதனால் எதிரே இருந்த செக்யூரிட்டி போலீஸ்காரரை நோக்கி நான் சென்றேன். அவனும் தைரியமாக என்னுடன் வந்தான்.
கன்னத்தில் 'பளார்'
இதையடுத்து அந்த போலீஸ்காரரிடம் நான் நடந்த விஷயங்களை கூறினேன். ஆனால் அவரோ பெரிதாக ரியாக்ட் பண்ணவில்லை. அவனை பார்த்து, "டேய் இங்கிருந்து போடா" என்று மட்டும் கூறினார். பின்னர் என்னிடம், "நீங்க போங்க மேடம்.. போங்க மேடம்" என்றார். போலீஸ்காரர் ஏதும் செய்யாததால் அவனுக்கு இன்னும் தைரியம் வந்துவிட்டது. உடனே அவன் என்னை பார்தது, கெட்ட வார்த்தையில் திட்டினார். இதனால் கோபத்தில் நான் அவனை 'பளார்' என அறைந்தேன். இதையடுத்து அவனும் என்னை அடிக்க பாய்ந்தான். ஆனால், நான் அவனது அடிகளை 'பிளாக்' (தடுத்து) செய்துவிட்டேன்.
"கூடுதல் பாதுகாப்பு வேண்டும்"
இதை பார்த்த அங்கிருந்த மக்கள், அங்கு வந்து அவனை விலக்கிவிட்டனர். பின்னர் அவன் அங்கிருந்து சென்றுவிட்டான். நான் தைரியமான பெண் என்பதால் இந்த சம்பவத்தை சமாளித்துவிட்டேன். ஆனால், இங்கு எத்தனையோ பள்ளி, கல்லூரி பெண்களும், இளம்பெண்களும் வருகிறார்கள். அவர்களுக்கு இந்த அளவுக்கு துணிச்சல் இருக்குமா என்று தெரியாது. எனவே மெரினா கடற்கரை முன்பும், டிஜிபி அலுவலகம் அருகிலேயே ரோந்து போலீஸாரின் (Patrol Police) எண்ணிக்கையை அதிகரிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நடந்த சம்பவத்தை பார்க்கும்போது, பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்பது மட்டும் தெளிவாகிறது. எனவே இந்த வீடியோவை பார்க்கும் அதிகாரிகள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண் கூறினார்.