மாண்டஸ் புயல்.. இன்று 3 தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. சென்னை உள்பட 8 இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக இன்று 3 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் ‛மாண்டஸ்' புயல் உருவாகி உள்ளது. இது தீவிர புயலாகவும் மாறியுள்ளது. இந்த புயல் இன்று காலை 5.30 மணியளவில் காரைக்காலில் இருந்து கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவும், சென்னையில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கு மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுகுறைந்து இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை மகாபலிபுரம் அருகே புயலாக கரையை கடக்க உள்ளது.

ரெட் அலர்ட் மாவட்டங்கள்
இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட் மாவட்டங்கள்
மேலும் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை முதல் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சென்னை மாவட்டங்களுக்கும் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள்
மேலும் 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தயார் நிலையில் தமிழகம்
இந்த புயல் காரணமாக தமிழகத்தில் அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் துறை, உள்ளாட்சி அமைப்பினர், போலீஸ், தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர் உள்பட அனைத்து துறைகளும் மீட்பு பணிக்காக தயாராக உள்ளனர். முக்கிய துறையில் பணிபுரிவோருக்கு விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் புயல் தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications