‛மாண்டஸ்’ புயல்.. புதுச்சேரி, தமிழகத்தின் 3 மாவட்டத்துக்கு ரெட்அலர்ட்.. 17 இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் ‛மாண்டஸ்' புயல் உருவாகி உள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை அதிதீவிர கனமழைக்கான ‛ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை உள்பட 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‛ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வங்கக் கடலில் கடந்த 5ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
மிரட்ட வரும் மாண்டஸ்! பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்! எங்கெங்கே தெரியுமா?
‛மாண்டஸ்’ புயல்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் உருவாகும் பட்சத்தில் ‛மாண்டஸ்' என பெயரிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‛மாண்டஸ்' புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலையில் அறிவித்தது. தற்போது இந்த புயல் காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கிலோமீட்டரிலும் மையம் கொண்டுள்ளது.
நாளை கரையை கடக்கும் புயல்
இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை இரவு அல்லது டிசம்பர் 10ம் தேதி காலையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட உள்ளது. மேலும் இன்று முதல் டிசம்பர் 10ம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 3 நாள் கனமழை
இந்நிலையில் தான் புயல் உருவாகுவதை மையப்படுத்தி நேற்று மாலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் பல்வேறு எச்சரிக்கைகளை வழங்கியது. இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 10ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மண்டல துணை இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
டெல்டாவுக்கு ஆரஞ்ச் அலர்ட்
அதன்படி இன்று டெல்டா மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ரெட் அலர்ட்
மேலும் டிசம்பர் 9 ம் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நாளை அதிதீவிர கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
டிசம்பர் 10ல் ஆரஞ்ச் அலர்ட்
இதேபோல் டிசம்பர் 10ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதுதவிர தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, மற்றும் வடக்கு இலங்கை கடல்பகுதிகளில் இன்று காற்று 40 முதல் 60 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம். மேலும் இந்த காற்றின் வேகம் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்தை தெடலாம். மேலும் டிசம்பர் 9, டிசம்பர் 10ம் தேதிகளான நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் என்பது 70 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம். இதனால் இந்த 3 நாட்கள் மேற்கூறிய கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.