மராட்டிய மேம்பாட்டு வாரியத்திற்கு எதிர்ப்பு...கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் பந்த்
கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: கர்நாடகாவில் மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா, மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைப்பதாக அறிவித்துள்ளார். அதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார். பெலகாவி விஷயத்தில் கர்நாடகம், மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், மராட்டிய சமூக மக்களின் வளர்ச்சிக்கு முதல்வர் அறிவித்துள்ள இந்த திட்டத்தை கன்னட சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த முடிவை வாபஸ் பெறக்கோரி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முழு அடைப்பை ஆளும் பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. முழு அடைப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்தார். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கவில்லை.
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்றாலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கன்னட அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டத்தினால் தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்தினால் மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் பகுதிக்கு செல்லும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இரு மாநில எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதிக்கு தலமலை வழியாக தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் முழு அடைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், கர்நாடக அரசு, மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கும் முடிவை வாபஸ் பெறக்கோரி நாங்கள் திட்டமிட்டப்படி இன்று முழு அடைப்பு நடத்துகிறோம். கன்னட மக்களின் உரிமையை நிலைநாட்டவே நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இதற்கு ஒட்டுமொத்த மாநில மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெங்களூருவில் முதல்வர் எடியூரப்பாவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் கமல்பந்த், முழு அடைப்புக்கு அனுமதி கிடையாது என்றும், இந்த போராட்டத்தின்போது பொதுச்சொத்துகளை காக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.