இரவு முழுக்க தொல்லை செய்கிறார்கள்.. எங்கள் கதி என்ன ஆகும்.. மெரினாவில் குமுறும் மீனவர்கள்!
மெரினாவில் போராடும் நொச்சிக்குப்பம் மீனவ மக்கள், தமிழக அரசின் மெரினா கடற்கரையை அழகு படுத்தும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: மெரினாவில் போராடும் நொச்சிக்குப்பம் மீனவ மக்கள், தமிழக அரசின் மெரினா கடற்கரையை அழகு படுத்தும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தால் தங்கள் வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று கூறியுள்ளனர்.
சென்னை நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மீனவர்களின் பொது பயன்பாட்டு இடங்களில் அரசு சாலை போட முடிவு எடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
அரசின் இந்த திட்டம் காரணமாக அங்குள்ள மீனவ மக்களின் கடைகள் அகற்றப்பட உள்ளது. இதை எதிர்த்து மெரினாவில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கு போராடும் மீனவ பெண்கள் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளனர்.
சொந்தம்
மீனவர்கள் அளித்துள்ள பேட்டியில், கடற்கரை அருகே இருக்கும் இடங்கள் எங்களுக்குத்தான் சொந்தம். மீனவர்கள் நாங்கள்தான் இதற்கு உரிமையாளர்கள். வண்டி, வாகனம் செல்ல நிறைய இடம் உள்ளது. எல்லா இடத்திலும் கார், பைக் செல்ல வேண்டும் என்றால் நாங்கள் எங்கே செல்வது. எங்கள் கதி என்ன ஆகும்.
தொல்லை
கடைகளை எடுக்க சொல்லி இரவு முழுக்க தொல்லை செய்கிறார்கள். காரணம் கூட சொல்லவில்லை. காரணம் இருந்தால்தானே சொல்வார்கள். மீனவர்கள் என்பதால் காரணம் கூட சொல்லவில்லை. இரவு முழுக்க கதவை தட்டி தட்டி தொல்லை செய்கிறார்கள்.
யாரும் இல்லை
எங்கள் மண்ணை விட்டு செல்ல சொல்கிறார்கள். இதைவிட்டால் நாங்கள் எங்கே செல்வது. எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு கட்சி கூட கிடையாது. இந்த கடையை எடுத்தால் அடுத்து போட், கட்டுமரத்தை கூட எடுத்துவிடுவார்கள். காவல்துறை எங்களை மிகவும் தொந்தரவு செய்கிறார்கள்.
என்ன கதை இது
இந்த இடம்தான் எங்கள் வாழ்க்கை. நாங்கள் இங்கே 20 வருடமாக இருக்கிறோம். இப்போது திடீர் என்று இதை அரசு இடம் என்று கூறி காலி செய்ய சொல்கிறார்கள். இப்போது நாங்கள் எங்கே செல்வோம் என்று மீனவ பெண்கள் குமுறுகிறார்கள். இந்த போராட்டம் காரணமாக அங்கே மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.