"டைம் பாம்கள்!" சென்னை உள்ளிட்ட நகரங்களில் மறைந்து உள்ள விபரீதம்.. அலர்ட் செய்யும் ஆய்வாளர்கள்
சென்னை: கோடைக் காலம் தொடங்கி உள்ள நிலையில், டெல்லி மற்றும் சென்னையில் உள்ள குப்பைக் கிடங்குகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்துகள் எச்சரிக்கை மணியை எழுப்பி உள்ளது.
இந்தியாவில் சேகரிக்கப்படும் குப்பைகளை பொதுவாக ஒரு இடத்தில் குவியலாகக் கொட்டப்படும். மறுசுழற்சிக்கு அதிக அளவில் செலவாகும் என்பதால் இப்படி ஒரே இடத்தில் குப்பைகளைக் குவித்துக் கொட்டுவதே வழக்கமாக உள்ளது
இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் இப்படி பெரும் குப்பைக் கிடங்குகள் இருப்பது வழக்கம்.
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் தீ! ஸ்பாட்டுக்கே போன கே.என்.நேரு.. 2 நாட்களில் சரியாகும் என உறுதி
பெருங்குடி குப்பைக் கிடங்கு
தலைநகர் சென்னையைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளும் 51 லட்சம் கிலோ திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. சில குப்பைகள் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்படுகின்றது. மீதமுள்ள கழிவுகள், பெருங்குடி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. சுமார் 225 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பைக் கிடங்கில் தான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. இதன் காரணமாக அங்கு சுமார் 34.02 லட்சம் கனமீட்டர் அளவுக்குக் குப்பை சேர்ந்துள்ளது.
தீ விபத்து
சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குப்பைக் கிடங்கை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும் என்று சில ஆண்டுகளாகவே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில், இந்த குப்பைக் கிடங்கில் எதிர்பாராத விதமாக நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இருப்பினும், இந்தத் தீ விபத்து 2ஆவது நாளாகத் தொடர்கிறது. இதனால் அங்கு கரும் புகை சூழ்ந்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
டெல்லி குப்பைக் கிடங்கு
வடக்கு டெல்லியில் அமைந்துள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கிலும் கிட்டதட்ட இதே நிலை தான். சுமார் 17 மாடி கட்டிடம் அளவுக்கு உயரமான பல்ஸ்வா குப்பைக் கிடங்கு, 50 கால்பந்து மைதானத்தைக் காட்டிலும் பெரியது. இந்த குப்பைக் கிடங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சென்னையைப் போலவே கடுமையான காற்று காரணமாக அங்கும் தீ படுவேகமாக பரவியது இந்தத் தீயை அணைக்கும் பணிகளில் டெல்லி பகுதியில் உள்ள அனைத்து தீயணைப்பு வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
என்ன காரணம்
இந்த இரண்டு இடத்தில் மட்டுமில்லை. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி சண்டிகர் தாதுமஜ்ரா குப்பை கிடங்கிலும், கடந்த மார்ச் 28ஆம் தேதி கிழக்கு டெல்லியின் காஜிபூர் குப்பைக் கிடங்கிலும் தீ விபத்து ஏற்பட்டது. இப்படி அடுத்தடுத்து ஏற்படும் தீ விபத்துகள் சுற்றுச்சூழலை மிகக் கடுமையாகப் பாதிக்கிறது. இது மட்டுமின்றி கரும் புகை, அங்கிருந்து கிளம்பும் கொசுக்கள் ஆகியவை காரணமாகவும் அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பைக் கிடங்குகளில் சமீப காலங்களில் இதுபோல அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுவது ஏன் தெரியுமா?
டைம் பாம்கள்
இந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் கவலை கொண்டுள்ளது. இதுபோன்ற குப்பைக் கிடங்குகள் "டைம் பாம்" போன்றவை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற குப்பை கிடங்களின் பரப்புகளில் மீத்தேன் வாயு அதிகம் உருவாகி இருக்கும். மீத்தேன் மிக எளிதாக எரியக் கூட வாயு என்பதால், சிறிய அளவு தீப்பொறி ஏற்பட்டாலும் கூட அது மிகப் பெரிய தீ விபத்திற்கு வழிவகுக்கும். மீத்தேன் மூலம் ஏற்படும் தீ விபத்து மிக அதிகமான வெப்பத்தை வெளிப்படுத்தும் என்பதால் அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதும் மிகச் சிரமம்.
மீத்தேன்
இது தொடர்பாகத் திடக் கழிவு மேலாண்மை வல்லுநர் அதின் பிஸ்வாஸ் கூறுகையில், "இது போன்ற தீ விபத்துகளுக்கு ஏற்பட பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கும். முதலில், மனித காரணம். கழிவுகளை அள்ளும் குப்பை எடுப்பவர்கள் கவனக்குறைவாக தீ ஏற்படலாம். இரண்டாவதாக, முக்கியமாக அழுகும் உணவுக் கழிவுகளிலிருந்து மீத்தேன் உருவாகிறது. அந்த மீத்தேன் வாயுவின் அழுத்தம் காரணமாக எதிர்பாதாரத விதமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற தீ விபத்துகளை அணைப்பது கடினம்" என்றார்,
எப்படி அணைக்க வேண்டும்
டெல்லி தீயணைப்பு படை இயக்குநர் அதுல் கர்க் கூறுகையில், "பல புள்ளிகளில் இருந்து தீ எரிவதாலும் நிலையான நீர் கிடைக்காது என்பதாலும் செங்குத்தாக இருக்கும் குப்பை மேடு பகுதிகள் சரியும் ஆபத்து உள்ளதாலும் இதுபோன்ற குப்பைக் கிடங்கு தீயை அணைக்க அதிக நேரம் எடுக்கும். குப்பை குவியலின் உயரத்தைக் கருத்தில் கொண்டு, மெதுவாகவே தீயை அணைக்க முயல்வோம். மலை போலக் குவிந்து இருக்கும் குப்பை குவியலில் ஏற முயலும் போது, அது தீயணைப்பு வீரருக்கு உயிருக்கு ஏற்படுத்தும்" என்றார்.
தீர்வு
குப்பைகளை அடுக்கி, சுருக்கி வைக்கும் போது, அதில் இருந்து வரும் கழிவுகள் சிதைந்து போகும். இதன் காரணமாக அதிக அளவு மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி ஆகிறது. இதையும் தாண்டி இப்படிக் குப்பைக் கிடங்குகளில் அடிக்கடி தீ விபத்துகளுக்கு ஏற்பட முக்கிய காரணமே அவை அறிவியல் பூர்வமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்படவில்லை என்பது தான் என்கிறார்கள் வல்லுநர்கள்! இனியாவது நகருக்கு வெளியே முறையான திட்டமிடல் உடன் மிக விரைவாகக் குப்பைக் கிடங்குகளை ஏற்படுத்துவதே இதற்குத் தீர்வாக இருக்கும்.