கருப்பு பூஞ்சைகளுக்கு மருந்து எங்கே கிடைக்கும்.. இருப்பு தகவலை வெளியிட தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
கருப்பு பூஞ்சைகளுக்கு மருந்து தயார் நிலையில் வைக்க வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்
சென்னை: "கொரோனா மருந்துக்கும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் இப்போது தேவை இருப்பது போல, இந்த கருப்பு பூஞ்சைக்கும் மருந்து தேவைப்படுகின்றது.. இது எங்கே கிடைக்கும் என்று மக்கள் தேடி கொண்டிருக்கிறார்கள்.. அதனால், தமிழக அரசு, இதுகுறித்து கவனம் செலுத்தி, ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும்" என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது... இன்னும் இதற்கே ஒரு தீர்வு கிடைக்காத நிலையில், அதற்குள் கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது...
ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை தொற்று நோயாகவும் அறிவித்துள்ளன. கருப்பு பூஞ்சை நோயை தமிழக அரசும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. இதேபோன்று ஒடிசா அரசு, கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக சேர்த்து உள்ளது.
கொரோனாவுக்கு அடுத்து கருப்பு பூஞ்சை தாக்குதல்...போராட அரசு ஆயத்தமாக வேண்டும் - வைகோ
வைகோ
கடந்த சில தினங்களாகவே, வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கிருந்து நம் தமிழ்நாட்டுக்குள்ளும் புகுந்துவிட்டது.. உயிர்பலிகளும் தொடங்கி உள்ளது.. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் அரசு இறங்கி வருகிறது. இந்நிலையில், கோவில்பட்டியிலும் 2 பேர் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:
கருப்பு பூஞ்சை
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள்.இந்த நிலையில், ஏற்கனவே கொரோனா தாக்கி, சிகிச்சை பெற்று மீண்டு வந்தவர்களை, கருப்பு பூஞ்சை (மியூகோர் மைகோசிஸ்) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வருகின்றன.
கோவில்பட்டி
மகாராஷ்டிர மாநிலத்தில் 64 பேர் இறந்து விட்டார்கள். டெல்லி மற்றும் கர்நாடகாவிலும் தாக்கி இருக்கின்றது. இதன் அறிகுறிகள் தமிழ்நாட்டிலும் தெரியத் தொடங்கி இருக்கின்றது. நேற்று கோவில்பட்டியில் இரண்டு பேர், கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தகவல் வந்தது. ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, கருப்பு பூஞ்சை உடனடியாகத் தொற்றுகின்றது.
பற்கள்
இது கண்கள், பற்கள் வழியாக குருதியில் கலந்து, உயிரைப் பறிக்கும் தன்மை உடையது. கொரோனா மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடுமையான தேவை ஏற்பட்டு இருப்பதுபோல, அடுத்து இந்த மருந்தும் தேவைப்படுகின்றது. எங்கே கிடைக்கும் என மக்கள் தேடுகின்றார்கள்.
தகவல்கள்
எனவே, தமிழக அரசு, இதுகுறித்துக் கவனம் செலுத்தி, ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மருந்து கிடைக்கும் இடங்கள், இருப்பு குறித்த தகவல்களை, தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை இணையத்தில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
சமூக விலகல்
பொதுமக்கள், சமூக விலகலைக் கடைப்பிடித்து, முககவசத்தை அணிந்து, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இல்லை என அறிவித்து விட்டார்கள். அதுபோல, அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரோனாவை ஒழிப்போம்" என்று கூறியுள்ளார்.