தமிழக தேர்தல் களத்துல வழக்கமான அந்த பிரமாண்ட தலைவர்கள் சங்கமிக்கும் சீனே இல்லையே? அவ்ளோ பயமா குமாரு?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது பிரசாரம். ஆனால் பொதுவாக கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் ஏறி பிரமாண்ட மாஸ் காட்டி நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள்தான் இந்த முறை ஏனோ மிஸ்ஸிங்.
தமிழக சட்டசபை தேர்தல் களங்களில் பொதுவாக தலைவர்கள் ஊர்தோறும் பிரசாரம் செய்வதும் அல்லது பாயிண்ட்டுகளில் நின்று பிரசாரம் செய்வதும் , முக்கிய வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதும் வழக்கமானது. அது மட்டும்தான் இந்த முறை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வழக்கமாக நடைபெறும் தேர்தல் பிரசாரங்களில் இந்த முறை பலவற்றையும் நாம் காணமுடியவில்லை. பொதுவாக கூட்டணி கட்சிகள், தாங்கள் தலைமை ஏற்றுள்ள கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை முன்வைத்து படுதீவிரமாக செய்வது வழக்கம்.
முதல்வர் வேட்பாளர்
இந்த முறை அதிமுக கூட்டணியாகட்டும், திமுக கூட்டணியாகட்டும் இரண்டிலும் அப்படியான பிரசாரத்தை மிக குறைவாகத்தான் கேட்க முடிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என்று பாஜக சொல்வதையும் கேட்க முடியவில்லை; மு.க.ஸ்டாலினை இந்த முறை முதல்வராக்கியே தீருவோம் என மதச்சார்பற்ற சக்திகள் சங்கநாதம் எழுப்புவதையும் அவ்வளவாக கேட்க முடியவில்லை.
டெல்லி தலைகள்
மற்றொன்றுதான் மிக முக்கியமானது. டெல்லியில் இருந்து வரும் தலைவர்கள் பொதுவாக கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவார்கள்; அதன்பின்னர் சில நாட்கள் தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் செய்துவிட்டு பறந்துவிடுவார்கள். இதுதான் வழக்கமாக நடைபெறுகிற ஒன்று. இம்முறை தேர்தல் களத்தில் அப்படியே தலைகீழாக நடக்கிறது.
இதுதான் நடக்கிறது
டெல்லியில் இருந்து பாஜக தலைவர்கள் வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் வருகிறார்கள்.. தொகுதி தொகுதியாக மக்களை சந்திக்கிறார்கள்.. பிரசாரம் செய்கிறார்கள்.. ஆனால் தங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்... இவரை ஜெயிக்க வையுங்க என பேசுவதற்கு மட்டும் என்னமோ அப்படி ஒரு தயக்கம்.. இருதரப்பிலும்தான்.
கூட்டணி கட்சிகள் கூட்டங்கள்
அதேபோல் கூட்டணி கட்சிகள் கூட்டுகிற பிரமாண்டமான ஒருங்கிணைந்த பொதுக்கூட்டம் எதுவும் இதுவரை தமிழகத்தில் நடைபெறவில்லை. 2016 தேர்தலில் கூட மக்கள் நலக் கூட்டணி ஆகப் பெரும் பொதுக்கூட்டத்தை ஒன்றாகக் கூட்டி அவர்களாகவே இன்னார் முதல்வர்; இன்னார் துணை முதல்வர் என்றெல்லாம் அறிவித்தார்கள்.. அப்படியான ஒருபோக்கு தற்போதைய களத்தில் இரு கூட்டணிகளிலுமே இல்லாத நிலைதான் காணப்படுகிறது.
பாஜக மீதான அச்சம்
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்களிடம் நாம் பேசிய போது, கடந்த கால தேர்தல்களை காட்டிலும் இப்போது வாக்காளர்களிடம் விழிப்புணர்வு அதிகம் இருக்கிறது. அதிமுக அணியை எடுத்துக் கொண்டால் பாஜகவுடனான கூட்டணி என்பது வேண்டா வெறுப்பான கட்டாய கூட்டணிதான். பாஜகவை முதுகில் சுமந்து கொண்டு தமிழகத் தெருக்களில் வலம் வந்தால் உள்ள ஓட்டும் கிடைக்காது என்பது அதிமுக தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் பட்டும்படாமல் பாஜகவை ஒதுக்கி வைத்தபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது அதிமுக.
அதிருப்திகள்தான்
அதேபோல்தான் ஈழத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான கோபம் தமிழகத்தில் இருக்கிறது. இதை தெரிந்து கொண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் காங்கிரஸுக்கு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நினைத்திருக்கலாம். அதனால்தான் கடந்த காலங்களைப் போல கூட்டணிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த பிரமாண்ட பொதுக்கூட்டங்களை இந்த முறை பார்க்க முடிவதில்லை. ஒருவேளை இனிமேல் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கும் இல்லை என்கின்றனர்.