சென்னை மெட்ரோ ரயில்கள்.. காலை மற்றும் மாலையில் மட்டுமே ஓடும்.. டைம் டேபிள் அறிவிப்பு
சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: செப்டம்பர் 7ஆம் தேதி முதல் சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்றும் அலுவலக நேரமான காலை 8.30 முதல் 10.30 வரை 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் அலுவலகம் இல்லாத நேரத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரல் பரவலை தடுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுப்போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது. பேருந்து போக்குவரத்து மட்டுமல்லாது ரயில்சேவை ரத்து செய்யப்பட்டது. மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
பல கட்ட லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பொது போக்குவரத்து இல்லாமல் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். இந்த நிலையில் லாக்டவுன் முடிந்து தற்போது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நான்காம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதியில் இருந்து மெட்ரோ ரயில்களும் இயங்கும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் 7 ஆம் தேதி முதல் இயங்க உள்ள மெட்ரோ ரயிலுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்றும் அலுவலக நேரமான காலை 8.30 முதல் 10.30 வரை 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் அலுவலகம் இல்லாத நேரத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் நிலையங்களில் முன்பு ஒவ்வொரு ரயிலும் 20 வினாடிகள் நின்று செல்லும், இந்த நேரம் 50 வினாடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் டோக்கன் மூலம் பயணிக்கும் முறைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு மூலம் பயணிக்க ஊக்குவிக்கப்படவுள்ளனர்.
பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வழிதடத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும். விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை இயக்கப்படும் ரயில்கள் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள லிப்டில் ஒரே நேரத்தில் மூன்று பேர் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.