கொரோனா பரவல் அச்சத்திற்கு இடையே மெட்ரோ ரயில் இயக்கம் - இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்திருந்தாலும் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கொரோனாவிற்கு 42 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தினசரியும் 90 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சிறப்பு ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஓடத்தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும் இந்தியாவும் தமிழகமும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பல கட்ட லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

நான்காம் கட்ட லாக்டவுன் தளர்வு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து சேவை அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் வெளி மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இன்று காலை முதல் தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதல் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு கோவைக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட்டது. இரண்டாவது ரயில் காலை 8 மணிக்கு எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுடன் பயணிகள் பலத்த சோதனைகளுக்குப் பின்னரே பேருந்து ரயில்களில் அனுமதிக்கப்பட்டனர்.

மெட்ரோ சேவைகளும் இன்று காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழிலாளர்களின் நிலையை கருதி காலை 7 மணி முதலே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று காலையில் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான முதல் மெட்ரோ ரயில் சேவையை அமைச்சர் எம்.சி சம்பத் தொடங்கி வைத்து மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 90 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களும் ஓடத்தொடங்கியுள்ளன. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் முக கவசம் அணிந்து எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை என இயல்பு நிலை திரும்பியிருந்தாலும் கொரோனா பரவல் பற்றிய அச்சம் மக்கள் மனதில் இருக்கத்தான் செய்கிறது. அவசியம் இருந்தால் தவிர வெளியே செல்வதை தவிர்த்து விடுங்கள் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளதால் பேருந்து, ரயில்களில் மக்களின் கூட்டம் குறைவாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications