இனியும் நடந்தா தூக்கிடுவேன்.. அறிவாலயத்தில் அவசர மீட்டிங்.. திமுக கவுன்சிலர்களை அலறவிட்ட அமைச்சர்!
சென்னை : சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் மீது புகார்கள் வந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் இன்று அதிரடி மீட்டிங் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, கவுன்சிலர்களை எச்சரித்ததாகவும், பெண் கவுன்சிலர்களின் அதிகாரங்களில் தலையிடும் அவர்களது கணவன்மார்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கவுன்சிலர்களை அழைத்துப் பேசி மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள், இனி எந்த புகார்களுக்கும் ஆளாகக் கூடாது என்றும் அமைச்சர் கே.என்.நேரு அட்வைஸ் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்..நேரு ஸ்டேடியம்? தேதி குறித்த எடப்பாடி & கோ..! உற்சாக ர.ர.கள்!
அத்துமீறும் கவுன்சிலர்களின் கணவர்கள்
உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பெண் பிரதிநிதிகளின் கணவர்கள், தங்கள் மனைவியரின் அதிகாரங்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. சென்னை மாநகராட்சி மண்டலக் கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்களே பங்கேற்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக பல சர்ச்சைகள் ஏற்பட்டு, முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கண்டிப்பாக உத்தரவிட்டும் கூட இந்த நிலை அவ்வப்போது தொடர்வதாக கூறப்படுகிறது.
கவுன்சிலர்கள் கூட்டம்
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் திமுக கவுன்சிலர்களுடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், மயிலை வேலு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
98 கவுன்சிலர்கள்
திமுக கவுன்சிலர்கள் சிலர் சரிவரப் பணியாற்றுவதில்லை என முதல்வர் ஸ்டாலினுக்குச் சென்ற புகார்கள் அடிப்படையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு திமுகவில் உள்ள 153 கவுன்சிலர்களில் பெண் கவுன்சிலர்கள் உட்பட 98 திமுக கவுன்சிலர்கள் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பருவமழை தொடர்பாக
இந்தக் கூட்டத்தில் விரைவில் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் சென்னையில் நடைப்பெற்று வரும் மழை நீர் வடிகால் கட்டுமான பணிகளை துரிதமாக முடிப்பது குறித்தும், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இதர திட்டப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும், பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை
அதுமட்டுமல்லாமல் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சில கவுன்சிலர்கள் மீது புகார் வருவது குறித்து மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் விசாரித்துள்ளார் அமைச்சர் கே.என்.நேரு. புகாருக்குரிய கவுன்சிலர்களை அழைத்துப் பேசி மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள், எந்த புகார்களுக்கும் ஆளாகக் கூடாது என்றும் அட்வைஸ் செய்துள்ளார்.
Recommended Video
கவுன்சிலர்களின் கணவர்கள்
மேலும், பெண் கவுன்சிலர்கள் சிலர் பணி செய்வதில்லை எனவும், பெண் கவுன்சிலர்களின் கணவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகவும் குற்றம்சாட்டிய அமைச்சர் கே.என்.நேரு, பெண் கவுன்சிலர்களின் கணவர்களையும் அழைத்து உங்கள் தலையீடு இருக்கக்கூடாது என்று கூறி
இதே நிலை நீடித்தால் உங்களை தூக்கி விடுவேன் என எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.