கூட்ட நெரிசல் காரணமாக நேற்று யாருமே உயிரிழக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபர பேட்டி!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமான சாகச நிகழ்விற்கு வந்திருந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, நீண்ட நேரம் வெயிலில் நின்றதாலும், நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டதாலும் நூற்றுக்கணக்கானோர் மயக்கமடைந்தனர். 5 பேர் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னையில் இந்திய விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவத்ற்கு தமிழ்நாடு அரசின் நிர்வாக ரீதியான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. தற்காலிக கழிப்பறைகள், குடிநீருக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 7500 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக 2 சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இருந்தனர். 40 ஆம்புலன்ஸ்களும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள், 20 தீவிர சிகிச்சைக்குரிய படுக்கைகளும், ரத்த வங்கியும் தயார் நிலையில் இருந்தன. 65 மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
மேலும், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை என்று ஏறத்தாழ 4000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் இருந்தன.
விமான சாகச நிகழ்ச்சிக்கு வரக்கூடிய மக்களுக்கு வெயிலின் தாக்கம் கொடூரமாக இருக்கும் என ஏற்கனவே குடை, தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்றும் கண்ணாடி, தொப்பி அணிந்து வர வேண்டும் என்றும் விமானப்படை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
வெயிலின் தாக்கம் நேற்று மிகக் கொடூரமாக இருந்தது. 5 பேரின் உயிரிழப்பு என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. 5 பேருமே வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இறந்த பிறகுதான் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாருமே, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் கிடையாது.
5 பேரின் உயிரிழப்பு என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. அப்படி அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு தோல்வியே கிடைக்கும்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 43 பேர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டார். 2 பேர் உள்நோயாளிகளாக உள்ளனர். ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 49 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உள் நோயாளியாக சிகிச்சையில் உள்ளார். 2 பேர் இறந்தவர்கள்.
ராயப்பேட்டை மருத்துவமனையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் உள் நோயாளியாக உள்ளார். 2 பேர் இறந்த நிலையில் அனுமதிக்கப்பட்டவர்கள். ஆக மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்." என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications