முதலாண்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி திறப்பு எப்போது? அமைச்சர் பொன்முடி சொன்னது இதுதான்!
சென்னை: முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு அக்டோபர் இறுதியில் கல்லூரிகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்பில் சேர இரண்டு கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் 3வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் அக்டோபர் 13ம் தேதி தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் இதுவரை 2 ஆம் கட்ட கலந்தாய்வுகள் நடைபெற்று, மாணவர்கள் அதிகளவு தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து உள்ளனர்.

பொன்முடி பேட்டி
இதைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 13ம் தேதி தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார்.

அக்டோபர் இறுதியில் வகுப்புகள்
2 ஆம் கட்ட கலந்தாய்வில் கல்லுரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்கள் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான 4-வது கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் கூறினார்.

துணை தேர்வு எழுதிய மாணவர்கள்
12 ஆம் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம் எனவும் அறிவித்துள்ளார். +2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டிலேயே கலை அறிவியல்கல்லூரிகளில் சேர்ப்பதற்கு, அந்தந்த கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

7 நாட்களுக்குள் கட்டணம்
இந்தாண்டு முதன்முறையாக கலந்தாய்வில் இடங்களைத்தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும். மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் எனத் தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் பொதுசெலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications