ஆதாரம் இருக்கு.. அமைச்சரை விடுவிக்க மறுத்த ஐகோர்ட்.. பொன்முடி காலைச் சுற்றிய 2 வழக்குகள்! கலக்கம்!
சென்னை : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனக்கு எதிரான 2 வழக்குகளிலும் தனக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அப்செட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில், பல முறை ஆஜராகாமல் தவிர்த்து வந்த பொன்முடி, நெருக்கடி காரணமாக சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்நிலையில், செம்மண் குவாரி முறைகேடு வழக்கிலும் அமைச்சர் பொன்முடி மீதான பிடி இறுகியுள்ளது. சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதில் உடந்தையாக இருந்ததாக பதிவான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

செம்மண் குவாரி
கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி மற்றும் அவரது உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. இதன் மூலம் அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அமைச்சர் பொன்முடி மனு
விழுப்புரம் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்து வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அமைச்சர் பொன்முடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பொன்முடி மனு தள்ளுபடி
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மனுதாரருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆதாரங்கள் உள்ளதாக கூறி, அமைச்சர் பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு ஒருபுறம் என்றால், சொத்துக்குவிப்பு வழக்கு மறுபக்கம் காலைச் சுற்றுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கு ஒருபக்கம்
அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ல் வழக்கு பதிவு செய்திருந்தது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை, திமுக ஆட்சிக்கு வந்ததும், வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகமால் வாய்தா வாங்கி வந்த பொன்முடி, கட்டாயம் ஆஜராக வேண்டும் என சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நெருக்கடி + ஷாக்
இதனால் நிலைமையை உணர்ந்த பொன்முடி, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் விஷயம் இன்னும் சிக்கலாகும் என்பதை உணர்ந்து சமீபத்தில் வேலூர் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் ஆஜராகினார். இந்த வழக்கு மீண்டும் 14ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அமைச்சராக இருந்தும், தொடர் நெருக்கடிகளால் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டதால் பொன்முடி கடுமையான அப்செட்டாம். இப்போது செம்மண் வழக்கிலும் தன்னை விடுவிக்க ஐகோர்ட் மறுத்திருப்பதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் பொன்முடி.












Click it and Unblock the Notifications