நாகை எங்கே உள்ளது எனத் தெரியாதவர்கள் டிவிட்டர், பேஸ்புக்கில் அரசை விமர்சிக்கிறார்கள்: அமைச்சர் கோபம்
சென்னை: சமூக விரோத எண்ணம் கொண்டவர்கள் பேச்சைக் கேட்டு போராட்டம் நடத்த வேண்டாம் என்று, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை, எழிலகத்தில் இன்று காலை 10.15 மணியளவில் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: பேரிடர் நிவாரண தொகையாக இருந்த ரூ.4 லட்சத்தை உயர்த்தி, கஜா புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எனவே, மக்களின் உணர்வுகளை அவரால் உள்வாங்க முடிகிறது.
நாகை எங்கே உள்ளது
ஆனால், சமூக செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் சமூக விரோத எண்ணம் கொண்ட சிலர், வீடுகளில் இருந்து கொண்டு டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் மீட்புப் பணிகள் குறித்து, விஷம கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நாகப்பட்டினம் எங்கே உள்ளது என்று தெரியாதவர்களும், நேரில் சென்று விவரம் அறியப்பெறாதவர்களும் வீடுகளுக்குள் இருந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் விஷம கருத்தை பரப்புகிறார்கள். மீட்புப் பணியில் ஈடுபடும் அரசுப் பணியாளர்களும் மனிதர்கள்தான், அவர்களும் நமது சகோதரர்கள்தான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
சமூக விரோதம்
மக்களைத் திசை திருப்பும், சமூக விரோத எண்ணத்தில் சிலர் செயல்படுவார்கள். ஆனால் அவர்களை மக்களே வெளியேற்ற வேண்டும். அத்தனை மக்களையும் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருந்த அதிகாரிகளும், பணியாளர்களும் பாராட்டத்தக்கவர்கள் அல்லவா. பொதுமக்கள் நீங்கள் அளித்த ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமானது. முதல்வர் விழிப்போடு இருந்து வழிகாட்டியதால் தான் இது சாத்தியமானது.
மீட்பு பணிகள்
இதற்கு முந்தைய காலகட்டங்களில் பேரிடர் மேலாண்மைக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே கிடையாது. ஜெயலலிதா தான் முதல்முறையாகப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தார். முன்பெல்லாம் பாதிக்கப்பட்ட இடங்களில் மரங்களை அறுப்பதற்கு ரம்பம் கிடையாது, பொருட்களை எடுத்துச் செல்வதற்கு லாரிகள் கிடையாது. ஆனால் இப்போது நவீன உபகரணங்கள் மூலமாக உடனுக்குடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடிகிறது.
மக்கள் ஒத்துழைப்பு
ஒரே நாளில் 100 சதவீதம் மீட்புப் பணிகள் நடைபெற்று விட்டது என்று நான் கூறமாட்டேன். இன்னும் சில பகுதிகளில் மீட்புப் பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. அனைத்துக் கிராமங்களிலும் மக்களே முன்வந்து ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். அரிவாள் போன்ற உபகரணங்களை ஊர் மக்களே அதிகாரிகளுக்கு வழங்குகிறார்கள். ஆனால் இரண்டே இரண்டு கிராமங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது மட்டும்தான் ஊடகங்களில் வெளியிடப்படுகிறது. மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்ற இளைஞர்களை நீங்கள் அடையாளப்படுத்தி ஊக்கப்படுத்தினால் பிற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் அதேபோல செயல்படுவார்கள். இதை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போராட்டங்கள்
இது நமக்கான அரசு, நமக்காகப் பணியாற்றுகிறது என்று உணர்ந்து அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள் இளைஞர்கள். அவர்களைப் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும். ஏனெனில், இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்தப் பேரிடர் காலத்தில் அரசியலைப் பார்க்கக்கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டால் தான் நிவாரணம் கிடைக்கும் என்று சிலர் மக்களைத் திசை திருப்புவார்கள். இதை நம்ப வேண்டாம் இவர் அவர் தெரிவித்தார்.