வேண்டாமா? அப்படியெல்லாம் சொல்லாதீங்க! அவருக்கு அப்பறம் நீங்கதான்.. உதயநிதியை அழைக்கும் ராஜகண்ணப்பன்!
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் தமிழகத்திற்கு தலைமை ஏற்க வேண்டும் எனவும், அண்ணா கலைஞர் வழியில் திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் திமுகவை வழி நடத்த வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த நிலையில் தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றார்.
பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஒருமுறை மட்டுமே அமைச்சரவையில் சிறு மாற்றம் ஏற்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான புகார்கள் அந்த இலாகா மாற்றம் நடைபெற்றது.

அமைச்சரவை மாற்றம்
இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே அதில் இருக்கும் ஒரு மூத்த அமைச்சருக்கும் மற்ற சில அமைச்சர்களுக்கும் இடையிலான இலாகா மாற்றம் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக நீண்ட காலமாக விவாதப்பொருளாக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவாரா? என்ற வினாவுக்கு விடை கிடைக்கும் என கூறப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்
கட்சியின் முக்கிய முகமாக வலம் வரும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல் அமைச்சர் சேகர்பாபு வரை அடுத்தடுத்து வலியுறுத்தி வந்த நிலையில் , இதுகுறித்து திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட திமுக கழகம் சார்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 'எனக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிட வேண்டுமென்று இனி யாரும் தீர்மானம் போட்டு தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார் திமுக இளைஞர் அணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின்.

மீண்டும் வலியுறுத்தல்
ஆனாலும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மகாராஜநகரில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கூட்டத்தில் முதலமைச்சருக்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் தமிழகத்திற்கு தலைமை ஏற்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி விடுதி மாணவ மாணவிகளுக்கு திருத்தியமைக்கப்பட்ட உணவு பட்டியலின்படி புதிய உணவு வகைகளை வழங்கும் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், அண்ணா, கலைஞர், கருணாநிதி போன்ற தலைவர்கள் தோற்றுவித்த திமுகவை மு.க ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் வழிநடத்த வேண்டும்' என வலியுறுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் போல உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்திற்கு தலைமை ஏற்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை பார்த்தேன். ஆனாலும் முதலமைச்சருக்கு பிறகு நீங்கள் தான் தமிழகத்தை வழிநடத்த வேண்டும்' எனவும் உதயநிதி ஸ்டாலின் இருந்த மேடையிலேயே அமைச்சர் ராஜகண்ணப்பன் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications