முடிச்சூர் ஆம்னி பேருந்துநிலையம் 95% ஓவர்! அடுத்த ஆண்டுக்குள் 18 பஸ் ஸ்டாண்ட்கள்: அமைச்சர் சேகர்பாபு
சென்னை: முடிச்சூரில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரும். 2025 டிசம்பர் மாதத்துக்குள் ஒட்டுமொத்தமாக 18 பேருந்து நிலைய பணிகளை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். வடசென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறிந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, சென்னை அகரம், ஜெகந்நாதன் சாலையில் விரைவில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள முதல்வர் படைப்பகம் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களுக்குச் சென்று உணவின் தரம் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "ஆம்னி பேருந்து நிலையம் ஒன்றை புதிதாக கட்ட திட்டமிட்டு ரூபாய் 42 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. முடிச்சூரில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. கூடிய விரைவில் பணிகள் முழுமையடுத்து, பயன்பாட்டுக்கு வரும்.
குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் கடந்த ஆட்சியில் ஆமை வேகத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன. பயணிகளின் தேவைகளுக்காக பல்வேறு புதிய வசதிகளையும் கட்டமைத்துள்ளோம். வரும் மார்ச் மாதம் அந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
அதேபோல, வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 7 பேருந்து நிலையங்களை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எடுத்துள்ளது. பெரியார் நகர், திரு.வி.க நகர், உதயசூரியன் நகர், முல்லை நகர், அம்பத்தூர், ஆர்.கே.நகர் போன்ற 7 இடங்களில் புதிதாக பேருந்து நிலையங்கள் பல்வேறு வசதிகளோடு உருவாக்கப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம், செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
2025 டிசம்பர் மாதத்துக்குள் ஒட்டுமொத்தமாக 18 பேருந்து நிலைய பணிகளை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். வடசென்னையில் கட்டப்பட்டு வரும் 7 புதிய பேருந்து நிலையங்களும் அடுத்தாண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும். இந்த பேருந்து நிலையங்களால் பண்டிகை காலங்களில் பெரியளவுக்கு மக்கள் வசதியாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பணிகள், சரியான திட்டமிடல் இல்லாததால் அதனை புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு பயணிகளின் தேவைகளை கேட்டு அறிந்து அனைத்து தேவைகளையும் முழுமையாக நிறைவேற்றியுள்ளது. தொடர்ந்து வரும் காலங்களில் அந்தப் பேருந்து நிலையத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்டு கட்டமைப்புகளை உருவாக்குகின்ற பணியில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறோம். முன்பு கேலியாக விமர்சனம் செய்தவர்கள் கூட, உலகத் தரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இருக்கிறது என்று தற்போது புகழ்ந்து பேசுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications