"எடப்பாடி.." எதிர்க்கட்சி தலைவர் கோட்டைக்குள் நுழையும் உதயநிதி ஸ்டாலின்.. அனல்பறக்கும் சேலம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் செல்வதையொட்டி அம்மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு முன்னேற்பாடுகளை கவனிக்கிறார்.
சென்னை: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு செல்வதையொட்டி அங்கு விழா ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
ஜனவரி 27ஆம் தேதி எடப்பாடியில் வைத்து சேலம் மாவட்ட திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதற்கு அடுத்தநாளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
தனது சொந்த தொகுதிக்கே வந்து அங்கு ஆய்வு, கட்சி நிகழ்ச்சி என அமைச்சர் உதயநிதி அதிரடி காட்டவுள்ளதால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு டென்ஷன் எகிறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல் பயணம்
அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சேலம் மாவட்டத்துக்கு நாளை மறுநாள் செல்கிறார் உதயநிதி ஸ்டாலின். எடப்பாடியில் நடைபெறும் திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். இதனால் அதற்கான முன்னேற்பாடுகளை சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவும், சேலம் மாவட்ட் திமுகவினரும் கவனித்து வருகின்றனர்.

ஏன் எடப்பாடி?
சேலம் மாவட்ட திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வை சேலம் மாநகரிலேயே நடத்தியிருக்க முடியும். ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான எடப்பாடியிலேயே கட்சி நிகழ்ச்சியை நடத்த விருப்பப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் எடப்பாடி தொகுதியில் அதிரடி ஆய்வுகளையும் உதயநிதி நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
இதேபோல் சேலம் மாவட்டத்தில் இன்னும் பல நிகழ்வுகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதனால் இவரை வரவேற்கும் பொருட்டு திமுகவினர் அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தனது சொந்த தொகுதிக்கு அமைச்சர் உதயநிதி வருவதையும், ஆய்வு நடத்துவதையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி துளியும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே எடப்பாடி பழனிசாமியை கடுப்பேற்ற தான் உதயநிதி எடப்பாடிக்கே செல்கிறார் எனக் கூறுகிறார்கள் சேலம் மாவட்ட உடன்பிறப்புகள்.

வெளியூர் பயணங்கள்
அமைச்சராகிய பிறகு திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கோவை, திருச்சி, என 5 மாவட்டங்களுக்கு மட்டுமே வெளியூர் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். இப்போது சேலம் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications