உதயநிதி ‘ராஜதந்திர’ மூவ்.. அழகிரி ஆக்டிவ் பாலிடிக்ஸ்.. "மகனுக்கு 1 சீட்" கேட்பாரா? மீட்டிங் பின்னணி?
சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியைச் சந்தித்து ஆசி பெற்றது அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. மு.க.அழகிரி மீண்டும் தீவிர அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து நமது 'ஒன் இந்தியா' தமிழுக்கு பேட்டியளித்துள்ள பத்திரிகையாளர் குபேந்திரன், அழகிரி மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை, அவரது மகனுக்கு வேண்டுமானால் இடம் கிடைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைக்க, மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியைச் சந்தித்து ஆசி பெற்றார்.
இந்தச் சந்திப்பு அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இது உதயநிதி ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வு எனத் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் குபேந்திரன். அவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:
மு.க.அழகிரி- உதயநிதி சந்திப்பு.. குடும்ப பாசம்தான்! ஆனால் முட்டி மோதி வீதிக்கு வரும்.. ஜெயக்குமார்
உதயநிதி - அழகிரி சந்திப்பு அரசியல்
கேள்வி : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்திப்புக்குப் பின்னணியில் அரசியல் இருக்கிறதா? இந்தச் சந்திப்பு தம்பி மகன் - பெரியப்பா இடையேயான சந்திப்பு மட்டும்தானா?
பதில் : இந்த சந்திப்பில் விசேஷமான அரசியல் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்ற பிறகு அழகிரியின் அரசியல் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. 2014 காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முடிந்தபிறகு கடந்த 7 ஆண்டுகளாகவே அழகிரி ஆக்டிவ் பாலிடிக்ஸில் இல்லை. அதனால், மீண்டும் அழகிரி அரசியலுக்கு வருவாரா எனக் கேட்டால் அதற்கு நேரடியான பதில் 'இல்லை' என்பதுதான்.
கட்சியில் மீண்டும்?
கேள்வி : தேர்தலில் நிற்காவிட்டாலும், திமுகவுக்குள்ளாவது அழகிரி வர வாய்ப்பிருக்கிறதா?
பதில் : திமுகவுக்குள் கூட மு.க.அழகிரி வரமாட்டார் என்று நினைக்கிறேன். அழகிரிக்கு வயது 72. இதற்குப் பிறகு அவர் தீவிர அரசியலுக்கு வர விரும்புவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. தனக்குப் பதிலாக தனது மகனுக்கு வேண்டுமானால் அவர் ஒரு இடம் கேட்கக்கூடும். அதற்கு வேண்டுமானால் வாய்ப்பிருக்கிறது. துரை தயாநிதி கிட்டத்தட்ட உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்தே செயல்படுகிறார். பல்வேறு இடங்களுக்கு இருவரும் ஒன்றாக வருகிறார்கள். துரை தயாநிதி, உதயநிதியின் அமைச்சர் பதவியேற்பு விழாவுக்கும் வந்தார். அதன்பிறகு அமைச்சர் உதயநிதி பங்கேற்ற கால்பந்து விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளிலும் துரை தயாநிதி கலந்துகொண்டார்.
முதல்வர் ஸ்டாலின் கட்டளை
இன்னும் ஒருபடி மேலே சொன்னால், உதயநிதி துரை தயாநிதிக்கு தனது பொறுப்பை கைமாற்றக்கூடும். உதயநிதி அமைச்சரான பிறகு அவர் படங்களில் நடிக்கக்கூடாது, படம் விநியோகம் செய்யக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் கட்டளை இட்டிருக்கிறார். இந்த 2 கட்டளைகளையும் உதயநிதி எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை. எனவே, ரெட் ஜெயிண்ட் மூவீஸை கிருத்திகா உதயநிதி நடத்தலாம், அல்லது துரை தயாநிதி நடத்தலாம். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. குடும்பத்திற்குள் இணக்கமாகச் செல்வதை நல்ல விஷயமாகவே பார்க்கிறேன்.
கூலிங் பீரியட்
கேள்வி : மு.க.அழகிரிக்கு என மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அவரை இப்போது சந்தித்து வாழ்த்துப் பெற வேண்டிய தேவை என்ன?
பதில் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் இடையேயான யுத்தமே, கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகக் கூடாது என்ற அழகிரியின் எண்ணத்தால் வந்ததுதான். அதன் காரணமாகவே அவர் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். ஆனால், அதன்பிறகு அவருக்கு ஒரு 'கூலிங் பீரியட்' தேவைப்பட்டிருக்கலாம். அவர் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்திருக்கலாம். அதன் காரணமாக அவர் தற்போது இணக்கமாக இருக்கிறார்.
அழகிரி தயாரா?
கேள்வி : மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு அழகிரி, அதை அவர்கள் (தலைமை) தான் முடிவு செய்யவேண்டும் எனச் சொல்கிறார்.. கட்சியில் சேரமாட்டேன் என மறுக்கவில்லை.. இதன் மூலம் அவர் கட்சியில் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகத்தானே தெரிகிறது..?
பதில் : மு.க.அழகிரி என்ன முடிவெடுப்பார், திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் அண்ணனை சேர்த்துக் கொள்வாரா என்ற கேள்விகளுக்கு எல்லாம் முன்னதாக ஒரு முடிவில் ஸ்டாலின் தெளிவாக இருப்பார். ஏற்கனவே, ஸ்டாலினுக்கு செயல் தலைவர் தருவதற்கு முன்பே எதிர்த்தவர். இருவருக்கும் இடையேயான நெருடல் மீண்டும் எதிர்காலத்தில் வெடிக்கவும் கூடும். அதனால், மு.க.அழகிரி அரசியலில் ஒதுங்கி இருக்கவே வாய்ப்பு அதிகம். தனது மகனுக்கு வேண்டுமானால் ஏதாவது கேட்டு வாங்கக்கூடும். மீண்டும் தென் மாவட்டங்களில் எம்.எல்.ஏ, எம்.பி சீட் வேண்டும், தனக்கு வேண்டியவர்களுக்கு இடம் வேண்டும் என்று அழகிரி செயல்பட்டால் அதனை முன்கூட்டியே ஸ்டாலின் தவிர்த்துவிடுவார்.
மீண்டும் அதிகாரம்
கேள்வி : அப்படியென்றால், மு.க.அழகிரி - உதயநிதி சந்திப்பை முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை என்கிறீர்களா?
பதில் : இல்லை, முதல்வரிடம் சொல்லாமல் உதயநிதி ஸ்டாலின் அழகிரியை சந்திக்கப் போயிருக்க மாட்டார். ஆனால், உதயநிதி சென்று அழகிரியைச் சந்தித்து ஆசி வாங்கியதால் மட்டுமே அழகிரி அரசியலுக்குள் வந்துவிடுவார், மீண்டும் தென் மாவட்டங்களில் தனது அதிகாரத்தைப் பரவலாக்குவார் என்று எதிர்பார்த்தால் அதற்கு வாய்ப்பில்லை.
ஆக்டிவ் பாலிடிக்ஸ்
கேள்வி : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியை சேர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா?
பதில் : 72 வயதில் மீண்டும் ஆக்டிவ் அரசியலில் அழகிரியால் ஈடுபட முடியாது. மீண்டும் பழையபடி தென் மாவட்ட அரசியலில் அதிகாரம் செலுத்துவது, தான் சொல்பவர்களுக்கு சீட் கொடுக்கும்படி வலியுறுத்துவதற்கும் ஸ்டாலின் இடம்தரமாட்டார். அதைத்தான் ஏற்கனவே டோட்டலாக கட் செய்துவிட்டாரே. அதுபோல இருக்க விரும்பாமல் தானே அழகிரி வெளியேற்றப்பட்டார்.. எனவே மீண்டும் அழகிரியை ஸ்டாலின் சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. துரை தயாநிதிக்கு எதிர்காலத்தில் வாய்ப்பிருக்கலாம். அதுவும், சகோதரச் சண்டை போட்டால் யாருக்கு நஷ்டம் என்பதை உணர்ந்து அவருக்கான இடத்தை அடைந்து கொள்ளலாம். உதயநிதி மதுரைக்குச் சென்றபோது தனது பெரியப்பாவைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறார். இதில், நாளை யார் யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என்று ஜோதிடமெல்லாம் சொல்ல முடியாது.
ராஜதந்திர மூவ்
மு.க.அழகிரியின் மகனுக்கு வேண்டுமானால் ஒரு இடம் கிடைக்கலாம். அதுவும், மீண்டும் ஒரு அரசியல் போட்டியாக உருவெடுக்க வேண்டாம் என்கிற வகையில், சினிமா கம்பெனியை மட்டும் துரை தயாநிதி பார்த்துக்கொள்ளும் வகையில் உடன்பாடு ஏற்படலாம். மற்றபடி உதயநிதி அழகிரியைச் சந்தித்தது ஒரு ராஜதந்திர நகர்வு. என் தந்தைக்கும் உங்களுக்கும் அரசியல் போட்டி இருந்தது, இன்று என் தந்தை முதல்வர். நான் அமைச்சர். நான் எல்லோரையும் அரவணைத்துச் செல்கிறேன் என்கிற செயல்பாட்டில் இருக்கிறார் உதயநிதி. அடுத்த தலைமுறையில் நல்ல இணக்கம் இருக்கிறது. உதயநிதி, அருள்நிதியோடும் இணக்கமாக இருக்கிறார். அதேபோன்ற உறவையே அனைவரிடமும் தொடர விரும்புகிறார். அதனை மேலும் வளர்த்துக்கொள்ள மாட்டார்.