என்ன இந்து கோவில்களை அபகரிக்கிறோமா? பிரதமர் மோடி பார்வையில் தவறு.. முதல்வர் ஸ்டாலின் பரபர பதிலடி!
சென்னை: தமிழ்நாடு அரசு, கோவில்களை அபகரித்துள்ளதாக பிரதமர் மோடி அண்மையில் பேசிய நிலையில், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன், அவரது பார்வையில் தான் தவறு என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற அண்மையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கனா மாநில அரசையும் முதல்வர் சந்திரசேகர் ராவையும் கடுமையாக விமர்சித்து பேசினார். அதோடு, தமிழ்நட்டு கோவில்கள் மாநில அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், "தமிழகத்திலுள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது. ஆலயங்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது அநியாயம். சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை. கோவில்களை கட்டுப்பாட்டில் வைத்து அதன் சொத்துகள், வருமானத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள தனது கூட்டணி கட்சியிடம் காங்கிரஸ் பேசி கோவில்களை விடுவிக்குமா?" மோடி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இன்று வள்ளலார் 200 நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின், "என்ன இது பெரியாரையும் போற்றுகிறார்கள், வள்ளலாரையும் கொண்டாடுகிறார்கள் - என்பதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொள்கிறார்கள். கோவில்கள் அனைத்தையும் பொன்போல போற்றிப் பாதுகாக்கிறார்களே இவர்களை என்ன சொல்லி குற்றம் சாட்டுவது என்பதும் சிலருக்கு குழப்பமாக இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக் கோவில்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துகள் மற்றும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது" என்று பகிரங்கமாக பிரதமர் மோடி பேசி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். பிரதமர் அவர்களுக்கு நான் எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும் - வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும் பொய்யை இந்திய நாட்டின் பிரதமர் கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்? இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 3,500 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தவறா? 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். இது தவறா?

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதைத் தவறு என்கிறார் பிரதமர்? பிரதமர் அவர்களின் பார்வையில் தான் தவறு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையும் - எல்லார்க்கும் எல்லாம் என்ற பொதுத்தன்மையுடனான ஆட்சியை நடத்தி வருகிறோம். கருணையுள்ள ஆட்சியை நடத்தி வருகிறோம்.
அதனால் தான் கருணை வடிவிலான வள்ளல் பெருமானைப் போற்றுகிறோம். போற்றுகிறோம். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வழியில் வாடிய உயிர்கள் அனைத்தையும் வாழ வைக்கும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்படும் என்று உறுதியாகக் கூறுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications