தமிழகத்திற்கு 7,000 ரெம்டெசிவிர் மருந்துகள் போதாது..தினசரி 20,000 குப்பிகள் வேண்டும் - ஸ்டாலின்
தமிழகத்துக்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை தினசரி 20 ஆயிரம் குப்பிகளாக அதிகரிக்க வேண்டும் என மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழகத்துக்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை 20 ஆயிரம் குப்பிகளாக அதிகரிக்க வேண்டும் என, மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அமைச்சரும், இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
தமிழகத்தில் பல ஊர்களில் ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை,மதுரை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட பல நகரங்களில் தினசரியும் 500 குப்பிகள் வரை மருந்து விற்பனை செய்யப்படுகிறது. பலரும் மருந்து கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்துக்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் மத்திய அரசிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை.
தமிழ்நாட்டில் தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தைத் தேவையான அளவுக்குக் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், ஆறு பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகின்றது.
அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருந்துக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தமிழ்நாட்டுக்கு இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரம் குப்பிகள், அதாவது நாளொன்றுக்கு 7,000 குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கு மிக குறைந்த வரி..முழு விலக்கு அளித்தால் விலை உயரும் அபாயம்..நிர்மலா சீதாராமன் விளக்கம்
தமிழ்நாட்டின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்பதால், இந்த ஒதுக்கீட்டை உடனடியாக உயர்த்தித் தர வேண்டுமென மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
நாளொன்றுக்கு தமிழகத்திற்குக் குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியுமென்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். மத்திய அமைச்சரும், இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்.