கராத்தே கொளுத்தி போட்ட ஸ்டாலினின் 2007 தாய்லாந்து பயணம்.. அப்போது வீசிய அரசியல் சூறாவளி!
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2007-ம் ஆண்டு தாய்லாந்து சென்ற பயணம் தமிழக அரசியலில் இப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து கராத்தே தியாகராஜனும் இது குறித்து பூடகமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதனையடுத்து ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் ஏன் மர்மமாக இருக்கிறது என முதல்வர் எடப்பாடியார் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடியாருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன், அண்ணன் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது 2007-ம் ஆண்டுநவம்பர் 1-ம் தேதி தனது நண்பருடன் தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றார்; அந்தத் தகவல் முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு ஸ்டாலின் விமானம் ஏறும் போது தான் தெரிந்தது; அமைச்சராக இருந்து கொண்டு மத்திய அரசின் அனுமதி பெறாமல் அண்ணன் ஸ்டாலின் வெளிநாடு சென்றுவிட்டார் என கூறியிருந்தார்.
இப்படி பெரும் சர்ச்சையாகிவிட்ட அந்த 2007-ம் ஆண்டு தாய்லாந்து பயணம் குறித்து நாம் விசாரித்த போது நமக்கு கிடைத்த தகவல்கள் இவை:

அதிகாரப் போட்டி
2007-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி தலைமையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார் ஸ்டாலின். திமுகவில் அப்போது ஸ்டாலினுக்கு இணையாக அழகிரி, கனிமொழிக்கும் முக்கியத்துவம் இருந்தது.

அழகிரியால் நெருக்கடி
ஸ்டாலினின் ஆதரவாளரான அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இலாகாவை கருணாநிதி மாற்றி அமைத்திருந்தார். இதற்கு முழு காரணமே அழகிரியின் நெருக்கடிதான் என கூறப்பட்டது.

மத்திய அமைச்சராக கனிமொழி?
அதேபோல் மத்திய அமைச்சரவையில் கனிமொழிக்கு இடம் உறுதி செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்த தருணம். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஸ்டாலின் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தன.

ஸ்டாலின் தாய்லாந்து பயணம்
இந்நிலையில்தான் திடீரென 2007-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி ஸ்டாலின் தமது 2 நண்பர்களுடன் தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றார். அப்போது விமான நிலையத்தில் இருந்த ஸ்டாலினை தொடர்பு கொண்ட முதல்வராக இருந்த கருணாநிதி, முதல்வராக இருக்கும் தமது அனுமதி பெறாமல் அமைச்சர் பதவி வகிக்கும் நிலையில் வெளிநாடு செல்லக் கூடாது என ஸ்டாலினிடம் கடிந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த பயணம் அப்போதே பரபரப்பாக பேசப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இவைதான் ஸ்டாலினின் அப்போதைய தாய்லாந்து பயணத்தின் பின்னணி என்கின்றன பத்திரிகை வட்டாரங்கள்.
இந்த பிரச்சனைகளுக்குப் பின்னரே 2009-ல் அழகிரி மத்திய அமைச்சராக்கப்பட்டதும் அவர் சென்னை வந்திறங்கும்போது ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்ற சம்பவங்களும் (மே 28, 2009- மே 29. 2009) நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications