ஸ்டாலின் மாஸ்டர்ஸ்ட்ரோக்.. அதிமுகவை கழற்றி விடுகிறது தேமுதிக?
Recommended Video
சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான வாய்ப்புகள் மிக குறைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஓரணியாகவும், திமுக-காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மற்றொரு அணியாகவும் களம் காண்கின்றன.
இதில் விஜயகாந்தின் தேமுதிக எந்த பக்கம் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
பியூஷ் கோயல் விஜயகாந்த் சந்திப்பு
தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஸ் கோயல் கடந்த 19ம் தேதி விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார். ஆனால், இதற்குப் பிறகு திடீரென, காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்த்தை நேரில், சந்தித்தார். அடுத்த திருப்பமாக விஜயகாந்தை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதையெல்லாம் விட மிகப் பெரிய திருப்பமாக திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரது, உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அதிமுக கூட்டணி வாய்ப்பு குறைவு
இப்படியாக உள்ள சூழ்நிலையில், எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதிமுக பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் இப்போது மிக மிக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் துவங்கிய ஆரம்ப காலகட்டங்களில் அதிமுகவுடன்தான், தேமுதிக செல்லும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
ஸ்டாலின் சந்திப்பு
திமுக தலைவர் செய்த மாஸ்டர்ஸ்ட்ரோக், இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 22ஆம் தேதி ரஜினிகாந்த், சந்தித்து சென்ற சில நிமிடங்கள் கழித்து விஜயகாந்தை ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பால், மிகவும் நெகிழ்ந்து போய்விட்டனர், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா. கடந்த சட்டசபை தேர்தலில் கருணாநிதியே, விரும்பினாலும் கூட தேமுதிகவை திமுக கூட்டணியில் சேர்ப்பதற்கு ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. அப்படிப்பட்ட ஸ்டாலின் தங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்ததை மிகப் பெரிய மாற்றமாக பார்க்கிறார்கள் விஜயகாந்தும் பிரேமலதாவும்.
ஸ்டாலின் வருகையால் மாற்றம்
அதேநேரம், இதுவரை அதிமுக தலைவர்கள் விஜயகாந்த்தை நேரில் வந்து நலம் விசாரிக்கவில்லை. பியூஸ் கோயல் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்ற போது கூட அதிமுக அமைச்சர்கள் யாரும் உடன் செல்வதை தவிர்த்து விட்டது, விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுக்கு மிகப்பெரிய நெருடலை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக தொண்டர்கள் கொதித்து போய் உள்ளனர். பாமக தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக அமைச்சர்களால், தேமுதிக தலைவர்களை நேரில் சந்திக்க முடியாதது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மற்றொரு பக்கம் இதுவரை எதிர்க்கட்சிகளாக பார்க்கப்பட்டு வந்த தேமுதிக-திமுக நடுவே இணக்கமான சூழ்நிலை, விஜயகாந்த் இல்லத்திற்கு ஸ்டாலினின் வருகையால் உறுதியாகியுள்ளது.
கோபம்
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் அது விஜயகாந்துக்கு மரியாதை குறைவு என்று பிரேமலதா நினைக்க, தொடங்கியுள்ளார். எனவே அதிமுக பக்கம் தேமுதிக இனிமேல் போக வாய்ப்பில்லை. ஸ்டாலின் நேரில் வந்து சந்தித்தையே, காரணமாகக் சொல்லி, திமுகவுடன் கூட்டணி வைப்பதைத்தான் தேமுதிக விரும்பும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். விஜயகாந்த், தன்மான உணர்ச்சி அதிகம் உள்ளவராக பார்க்கப்படுபவர். சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்து நாக்கை துருத்தி கேள்வி எழுப்பியவர். எனவே தன்னை வந்து மரியாதை நிமித்தமாக கூட சந்திக்காத அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே மாட்டார் என்று ஆருடம் சொல்கிறார்கள் அவர்கள்.