"5 + 1" .. ரெடியானது லிஸ்ட்.. "இது"தான் காரணமாம்.. ஸ்டாலினின் தில் மூவ்.. திணறும் கூட்டணிகள்..?
திமுக கூட்டணி கட்சியில் சீட் ஒதுக்கீட்டில் இழுபறி நடந்து வருகிறது
சென்னை: திமுக கூட்டணி இன்னும் ஒரு முடிவுக்கு வராமலேயே இருக்கிறது.. இதனால் அக்கூட்டணி உடையுமா? அப்படியே தொடருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வரும் நிலையில்தான், அது சம்பந்தமான ஒரு தகவல் காற்று வாக்கில் பறந்து கொண்டிருக்கிறது.
இந்த முறை திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.. அதற்காகவே கட்சிக்குள் பலருடைய எதிர்ப்பையும் மீறி பிரசாந்த் கிஷோர் டீமை திமுக உள்ளே இறக்க உள்ளது.
10 வருடம் கழித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், முதல்வர் பதவியில் உட்கார வேண்டும் என்றால், தங்களின் அனைத்து வியூகங்களுக்கும் ஒத்துழைப்பும், சம்மதமும் தர வேண்டும் என்று ஐபேக் கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அதற்கேற்றபடி, இப்போதுவரை ஸ்டாலின் ஐபேக்கின் திட்டங்களின்படியும், வியூகங்களின்படியும்தான் செயல்பட்டு வருகிறார்.
யோசனை
அந்த ஐபேக்கின் ஒரு யோசனைதான், கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, பெரும்பாலான இடங்களில் திமுகவே போட்டியிட வேண்டும் என்பதுதான் அந்த முடிவு.. அதற்காக கூட்டணிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
தனித்தன்மை
ஆனால், தங்கள் கட்சிகளின் தனித்தன்மை இழக்க விரும்பாத மதிமுகவும், விசிகவும் கையை பிசைந்து நிற்கின்றனர்.. இதில் வைகோ ஓரளவு திமுக பக்கம் வந்துவிட்டார் போல தெரிகிறது.. அதேசமயம், விசிகவுக்கு தமிழகம் முழுவதும் வாக்கு வங்கி ஓரளவு இருக்கிறது என்பதும், இத்தனை வருடம் திமுகவின் அனைத்து ஆர்ப்பாட்டம், போட்டங்களிலும் உடனிருந்து ஆதரவு தந்தது என்பதும், தலித் வாக்குகளை பெற வேண்டி இருப்பது தெரிந்தும், விசிகவுக்கு ஏன் தாராளமாக சீட் வழங்கப்படவில்லை என்ற சந்தேகமும் உள்ளது.
காங்கிரஸ்
விசிக என்றில்லை, காங்கிரசுக்கே இப்படித்தான்.. சோனியா காந்தி மீது அளவுக்கு அதிகமான மரியாதையை ஸ்டாலின் வைத்திருந்தாலும், மதுரை ஜல்லிக்கட்டிற்கு ராகுல் வந்து போயிருந்தாலும்கூட, அக்கட்சிக்கும் குறைந்த அளவே சீட் ஒதுக்க யோசித்து வருகிறது.. இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
லிஸ்ட்
ஐபேக் ஒரு ரிப்போர்ட் எடுத்துள்ளது.. அதில், திமுக ஜெயித்துள்ள சிட்டிங் தொகுதிகளோடு, இனிமேலும் வெற்றி வாய்ப்புள்ள மேலும் 100 இடங்களை அடையாளம் கண்டறிந்து, அந்த லிஸ்ட்டை ஸ்டாலினிடம் தந்திருக்கிறது.. அந்த லிஸ்ட்டில்தான், கூட்டணி கட்சிகள் விடாமல் கேட்டு வரும் தொகுதிகளும் அடங்கியிருக்கின்றனவாம்.. இவ்வளவு கஷ்டப்பட்டு, பல்வேறு முயற்சிகள், வியூகங்களுக்கு நடுவில் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக திமுகவு கருதுகிறது..
உதயசூரியன்
அதனால்தான், இந்த முறை அவைகளை கூட்டணிகளுக்கு விட்டுத்தர தயாராக இல்லையாம். விரும்பிய தொகுதிகளும் கிடைக்காமல், கேட்ட சீட்டும் கிடைக்காமல், நினைத்த சின்னத்திலும் நிற்க முடியாமல், உதயசூரியன் சின்னத்திலேயே முழுக்க முழுக்க போட்டியிடவும் முடியாமல்தான் கூட்டணிகள் திணறி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல இன்னொரு விஷயமும் கசிந்து வருகிறது..
கூடுதல் தொகுதி
மதிமுக, விசிக, 2 கம்யூனிஸ்ட்களுக்கு தலா 5 சீட் வழங்கப்படலாம் என்கிறார்கள்.. இதில் மதிமுகவை மட்டும், ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதால், அதை சுட்டிக்காட்டி 5 சீட்டுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று திமுக வலியுறுத்துவதாக தெரிகிறது. ஒருவேளை உதயசூரியனில் நின்றால், கூடுதல் தொகுதிகளும் மதிமுகவுக்கு ஒதுக்கப்படுமாம்.
வைகோ
இதேதான் விசிகவுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் சொல்லப்பட்டுள்ளது.. 5 சீட் வாங்கி கொண்டால், வைகோவுக்கு ஒதுக்கியது போலவே உங்களுக்கும் ராஜ்ய சபா சீட் தருகிறோம் என்று திமுக கூறியதாம்.. ஆனால், தேர்தல் முடிவு எப்படி இருக்க போகிறது என்று தெரியாமல், உதயசூரியன் சின்னத்தில் நிற்கும்போது கட்சியின் தனித்தன்மை எப்படி இருக்க போகிறது என்றும் புரியாமல் கையை பிசைந்து வருகிறதாம் கூட்டணி கட்சிகள்.. இதெல்லாம் யூகங்களின் அடிப்படையில் கசியும் செய்திகள் என்றாலும், பகிரங்கமாக, வெளிப்படையாக, கூட்டணிகள் சேர்ந்து பேசும்போதுதான் இறுதி முடிவு எட்டப்படும்..!