சிங்கம் களம் இறங்கிருச்சு.. ஈரோடு இடைத் தேர்தலில் களமிறங்கும் கமல்ஹாசன்? நேராகப் பறந்த தீர்மானம்!
சென்னை : ஈரோடு இடைத் தேர்தலில் பலமுனைப் போட்டி உருவாகப் போவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் தேர்தலில் கமல் போட்டியிட வேண்டுமென அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவேரா திடீரென உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கு ஆறு மாதங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டி இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர் நடக்கும் முதல் இடை தேர்தல் என்பதாலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் தேர்தல் என்பதாலும் இந்த தேர்தல் மிகவும் ஆர்வத்துடன் எதிர் நோக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
டைம் வேஸ்ட்..மணி வேஸ்ட்! மொத்தமாய் இறங்கும் பவர்! ஈரோடு இடை தேர்தலை புறக்கணித்த பாமக! இதுதான் காரணம்
ஈரோடு இடைத் தேர்தல்
அதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு ஜனவரி 31ஆம் தேதி மனு தாக்கல் தொடங்கி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக பிப்ரவரி 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது எட்டாம் தேதியும் வாபஸ் பெற கடைசி தேதி பிப்ரவரி 10ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.
மீண்டும் காங்கிரஸ்
கடந்த முறை சட்டசபை தேர்தலில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அந்த தேர்தலில் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் திருமகன் ஈவெரா மரணமடைந்ததையடுத்து அந்த தொகுதியில் தங்கள் கட்சியே போட்டியிடும் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியிருக்கிறது. மேலும் திமுகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.
யார் யார் போட்டி?
அதிமுக தரப்பிலும் ஈரோடு இடைத்தேர்தலில் சந்திக்க அந்த கட்சி தீவிரம் காட்டி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெரும் முயற்சியில் ஓபிஎஸ் இபிஎஸ் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியும் தேர்தலில் களமிறங்குகிறது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தலில் போட்டியிடுமா என்பது குறித்து 27ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தேர்தல் குறித்து என்ன முடிவு எடுப்பார் என்பது அரசியல் களத்தில் விவாத பொருளாக இருந்தது.
கூட்டணியில் போட்டி
கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் தீவிர நெருக்கம் காட்டி வரும் கமல்ஹாசன் அவரது ஒற்றுமை ரத யாத்திரையிலும் கலந்து கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் அவர் இணைய போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன
தீர்மானம்
இதற்கிடையே தேர்தலில் கமல் போட்டியிட வேண்டுமென அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை அமைப்பான நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் தலைவர் பொன்னுசாமி நடைபெற்றது. இக்கூட்டத்தில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் வளர்ச்சி, மக்கள் நீதி மய்யம் 6ம் ஆண்டு துவக்க விழா, மே-1 உழைப்பாளர் தின விழா, பேரவைக்கு புதிய பொறுப்பாளர் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கமல் போட்டி
குறிப்பாக ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களம் காண வேண்டும், அதில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களோடு மேலும் சில தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு அவை ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு கமல்ஹாசனுக்கு மின்னஞ்சல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே கமல் தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில், தற்போது அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.