ஒரு வருடம் லேட்டாக தடுப்பூசி பாலிசியை அறிவித்துள்ளார் மோடி.. தினமும் ஒரு குழப்பம்- விளாசும் டாக்டர்
சென்னை: கொரோனா தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசு இப்போது வரை கடுமையாக தடுமாறி வருகிறது என்று சரமாரியாக விளாசியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.
மத்திய அரசு ஜூன் 21ம் தேதி முதல் மொத்த கொரோனா தடுப்பூசி கொள்முதலில் 75 சதவீதத்தை மாநிலங்களுக்கு வழங்கும், அதுபோக மீதமுள்ள 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கிக்கொள்ளலாம் என பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் பேசிய தனது உரையில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின்
இதுகுறித்து கருத்து தெரிவித்த சாந்தி ரவீந்திரநாத் கூறியதை பாருங்கள்:
நேரத்தை இப்படியா வீணடிப்பது
கொள்ளைநோய் காலத்தில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், முக்கியமான நேரம். மத்திய அரசின் பணம், மாநில அரசின் பணம் என ஒவ்வொரு விஷயமும் முக்கியமான அம்சம். சரியாக இலக்கு நிர்ணயித்து நேரமும் , பணமும் செலவிடப்பட வேண்டிய காலகட்டம் இதுவாகும். ஆனால் மத்திய அரசு அப்படியா நடந்து கொள்கிறது. தடுப்பூசி கொள்கையை மாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி இப்போது தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் கொள்கையை கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாற்றி இருக்க வேண்டும்.
தினம் ஒரு விதிமுறை
ஒவ்வொரு நாளும் புதுப்புது விதிமுறைகளை கொண்டு வந்து மக்களை குழப்பி கொண்டிருக்கிறது மத்திய அரசு. கரோனா தடுப்பூசிகளை மாநில அரசு வாங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்ததால் அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதற்கு உரிய பணிகளை துவங்கி விட்டனர். இதற்காக ஏகப்பட்ட கால நேரம் விரையம் ஆகியுள்ளது . ஆனால் இப்போது வந்து அது வேண்டாம் என்கிறார் மோடி.
பெரிய அறிவிப்பு இல்லை
உற்பத்தி செய்யப்படுவதில் 50 விழுக்காடு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு இலவசமாக தருவோம் என்று முன்பு மத்திய அரசு கூறியிருந்தது. இப்போது அதை 75% என்று உயர்த்தியுள்ளது. எஞ்சிய 25 சதவீதம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகள் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்று மோடி அறிவித்துள்ளார். எனவே இது ஒரு மிகப்பெரிய அறிவிப்பு கிடையாது.
முன்பே சொன்னார்களே
மாநில அரசு இதற்காக செலவிட தேவையில்லை என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்பும் மத்திய அரசு இப்படி கூறியது. ஆனால் 18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு மாநில அரசுதான் தடுப்பூசிக்கு செலவிட வேண்டும் என்று கொள்கையை மாற்றினார்கள். எப்போது இப்படி கொள்கையை மாற்றினார்கள் என்பது குறித்து எந்த தகவலும் கிடையாது. மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருப்பது தான் மத்திய அரசின் கொள்கையாக இருக்கிறது.
கெட்ட பெயர் வருவதால் மாற்றம்
இப்போது அறிவித்ததையும் நாம் முழுமையாக நம்பி விடமுடியாது. ஜூன் மாதம் 21ம் தேதி தடுப்பூசி கொள்கையை மாற்றுவதாக மோடி அறிவித்துள்ளார். இதெல்லாம் ஓராண்டுக்கு முன்பாக செய்ய வேண்டிய வேலை. இப்போது அறிவிக்கிறார். நம்மிடம் இரண்டு தடுப்பூசிகள் இருக்கப்போகிறது என்பது மத்திய அரசுக்கு டிசம்பர் மாதமே நன்கு தெரியும். அப்படி இருந்தும் இத்தனை நாட்களாக தாமதம் செய்து மிகப் பெரிய பாதிப்புக்கு காரணமாகிவிடும். பல உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதால் வேறு வழியின்றி இப்போது தாமதமாக தடுப்பூசி கொள்கையை மாற்றுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரண்டாவது டோஸ் காலகட்டம் அதிகரிப்பு ஏன்?
ஒட்டுமொத்தமாக தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு தவறுகளை செய்தபடி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் 70% அளவுக்கு இந்த வகை உருமாறிய டெல்டா வைரஸ்கள் பரவியுள்ளன. இதற்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி செயல்படுமா என்பது குறித்து இன்னும் டேட்டாவே வெளியிடப்படவில்லை. இன்னொரு பக்கம் தடுப்பூசி இரண்டாவது டோஸ் காலகட்டத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இங்கிலாந்து போன்ற நாடுகளில் டோஸ் காலகட்டம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இப்படியாகத் தொடர்ந்து குளறுபடிகள் உடன் செயல்படுகிறது மத்திய அரசு. இவ்வாறு சாந்தி ரவீந்திரநாத் தெரிவித்தார்.