எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது.. கோவை சம்பவம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம்
சென்னை: என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா? சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக (கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில்) எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என மூத்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை உக்கடம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வியாழக்கிழமை மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி முதலில் படித்த சின்மயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி, தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இன்று காலை கைது
இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் துறையினர், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் போலீஸ் விசாரணை வளையத்தில் இருந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் இன்று(ஞாயிறு) காலை பெங்களூருவில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தலைவர்கள் கண்டனம்
ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம், அதை மூடி மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகம், ஆசிரியருடன் நடந்த வாட்ஸ் அப் சாட்டுகள், பெற்றோரின் கதறல் எல்லாவற்றையும் பார்த்து கொதித்து போன மக்கள் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பாலியல் தொல்லை
அந்த வகையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ. தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை.

ஆஜராக வேண்டாம்
என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா? சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது.

கடுமையான தண்டனை
அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும். அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள் " இவ்வாறு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications