உனக்கென்னப்பா நீ பைத்தியம்! ட்விட்டரில் சீண்டிய எச்.ராஜா! பதிலடி கொடுத்த நாம் தமிழர் சீமான்! பின்னணி?
சென்னை : ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, 'நீ காணாமல் போய்விடுவாய்' என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்திருந்த நிலையில், அவர் மனநல மருத்துவனைக்குச் செல்வது நல்லது என சீமான் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
வரும் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்த காவல் துறை அனுமதிக்க அளிக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக காமராசர் நினைவு நாளையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான்,"ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என பேசினார்.
நான் பெருமைமிக்கத் தலைவனின் மகன் .. எச்.ராஜாவை மனநல மருத்துவரிடம் சேர்க்கனும்.. சொன்னது சீமான்
எச்.ராஜா
அவரது பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா 'நீ காணாமல் போய்விடுவாய்' என கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து 'சிலம்புச்செல்வர்' ம.பொ.சிவஞானம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமானிடம் மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,அவர் மனநல மருத்துவனைக்குச் செல்வது நல்லது என சீமான் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
நாம் தமிழர் சீமான்
இது தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், உனக்கென்னப்பா நீ பைத்தியம். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், ஐயா அப்துல் கலாம் போன்றவர்களெல்லாம் இந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள் என்று பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும்போது, உங்களுக்குக் கோவம் வருவது போல எனக்கும் கோவம் வருகிறது. அப்படிப்பட்ட பாடப் புத்தகங்களை ஒரு காலம் வரும்போது நாங்கள் கொளுத்துவோம் என்று கூறினேன்.
ஆர்.எஸ்.எஸ் கொள்கை
ஹெச். ராஜா போன்றவர்கள், அதை ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைக் கொளுத்துவோம் என்று கூறியதுபோலப் புரிந்துக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்களின் ஆர்.எஸ்.எஸ் கொள்கையும் அது தான் என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். ஐயா ஹெச். ராஜாவிற்கு நான் சொல்லிக்கொள்வது, இந்த நாட்டை ஆளுகிற பிரதமர், உங்களுடைய ஐயா மோடி அவர்களை எதிர்த்துச் சண்டை செய்து வருகிறோம். அவருக்கும் குருவாக இருக்கிற நாக்பூர் தலைமை பீடத்திடமே நாங்கள் மோதுகிறோம்,
ஒன்றும் செய்துவிட முடியாது
நீங்கள் எங்களுக்கு எம்மாத்திரம். நீங்களில்லை, உங்களின் அப்பாவிற்கு அப்பா வந்தால் கூட எங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. நான் எத்தகு பெருமைமிக்கத் தலைவனின் மகன் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியாது என்றால், தெரிந்துகொண்டு பிறகு பேசுங்கள். ஹெச். ராஜா ஒரு பரிதாபம் என்பதால் அவரைக் கடந்து செல்கிறேன். பாரதிய ஜனதா கட்சிக்காரர்களிடத்திலும், ஐயா ஹெச். ராஜா அவர்களின் குடும்பத்தினரிடமும் நான் அன்பாக விரும்பிக் கேட்டுக்கொள்வது, அவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடத்தில் சேர்த்துச் சிகிச்சை அளிக்குமாறு உங்களை அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.