திராவிட கட்சிகள் பாணியில் அதிகாரத்தை நோக்கி இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் சீமான்- கனவு நிறைவேறுமா?
சென்னை: திராவிடம், திராவிடர் இயக்கம், திராவிட கட்சிகளை மிக கடுமையாக எதிர்த்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்போது அதே திராவிட பாணியில் இந்தி எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்.
திராவிடர் இயக்கம் சமூக நீதி, மொழிப் பிரச்சனை உள்ளிட்டவைகளில் உயிர்ப்போடும் தீரத்தோடும் மத்திய அரசுடன் யுத்தம் நடத்தியது. 1938-ம் ஆண்டு தொடங்கிய மொழிப்போருக்கான யுத்தம் இன்னமும் தொடருகிறது. குறிப்பாக 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு யுத்தத்தின் போது எண்ணற்றோர் தீக்குளித்து மாண்டு போயினர். பல நூறு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகினர்.
1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான பல நூறு செய்திகள் எழுதப்படாமலேயே புதைந்து கிடக்கிறது என்கின்றனர் அந்நாளைய மொழிப் போர் தளபதிகள். அந்த இந்தி எதிர்ப்பு யுத்தத்தை தொடர அனுமதித்திருந்தால் ஆயுத கிளர்ச்சி தமிழ்நாட்டில் நடந்திருக்கும் என்பதும் மொழிப் போர் களத்தின் முன்னணியாளர்கள் கருத்து.
பாஜக ஒரு பிஸினஸ் கட்சி.. வெறுப்பை பரப்பி மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது.. விளாசிய ராகுல் காந்தி
இந்தி எதிர்ப்பு போரும் திராவிட அதிகாரமும்
1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரில் முதன்மை பங்காற்றியது திமுக. இதன்விளைவாக 1967-ல் திமுக எனும் திராவிட கட்சி வசமானது தமிழக அதிகாரம். அன்று தொடங்கி திமுக, அதிமுக எனும் இரு பெரும் திராவிட கட்சிகள்தான் தமிழர் நிலத்தில் அதிகார சக்திகளாக இருக்கின்றன. இந்திய நிலப்பரப்பில் வேறு எங்கும் காணாத விசித்திரமான ஒரு அரசியல் சூழ்நிலை களம். அதனால்தான் இம்மண்ணில் காங்கிரஸால் மீண்டு எழ முடியவில்லை. பாஜகவால் காலூன்றவே முடியவில்லை.
நாம் தமிழர் கட்சி
திராவிடத்தின் இந்த மாபெரும் கோட்டையைத் தகர்த்துப் பார்க்க முயற்சிக்கிறது நாம் தமிழர் கட்சி. 13 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட கட்சி என்றாலும் திராவிடத்தையே பிரதான எதிரியாகக் கொண்டு தமிழியம், தமிழ்த் தேசியம் ஆகியவற்றை முன்னிறுத்தி களத்தில் நிற்கிறது நாம் தமிழர் கட்சி. தமிழகம் தழுவிய அளவில் பரந்துபட்டு நாம் தமிழர் கட்சி ஒரு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அது வாக்குகளாக அறுவடையாகவில்லை.
இந்தி எதிர்ப்பு ஆயுதம்
இந்த நிலையில் திராவிட கட்சிகள் பாணியில் இந்தி எதிர்ப்பு எனும் ஆயுதத்தை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருந்த அறிக்கையில், பல மொழிவழி தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் இந்தியைத் திணிக்க முற்பட்டால், இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களும் அதனை ஏற்றுக் கொண்டாலும்கூட, தமிழ் மண் ஒருபோதும் தலை வணங்காது. தமிழ்நாடு மீண்டும் போர்க்கோலம் பூண்டு இந்தி திணிப்பைக் கடுமையாக எதிர்க்கும்! தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! அந்த மொழிப்போர்க்களத்தில் முதன்மை படையாக நாம் தமிழர் கட்சி இருக்கும்! அதற்கான தொடக்கமாக வருகின்ற 'நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்' அன்று இந்தி திணிப்புக்கு எதிரான மாபெரும் கண்டனப் பேரணியை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவிருக்கிறது என கூறியிருந்தார்.
சென்னை பேரணி கை கொடுக்குமா?
மேலும் நாம் தமிழர் கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், இப்பேரணியில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உங்களுடைய பாதுகாப்பும் முக்கியம் என்பதை உறவுகள் அனைவரும் உணர்ந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். வரலாறு காணாத வகையில் நடைபெறவுள்ள மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் உணர்ச்சிப்பெருக்குடன் வருகை தரவிருக்கும் எனது பேரன்பிற்குரிய உறவுகளையும், அன்புத் தம்பி, தங்கைகளையும் நேரில் காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியிருந்தார். நாம் தமிழர் கட்சியின் வரலாற்றில் சென்னை இந்தி எதிர்ப்பு போராட்டம் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கக் கூடும் என்பது அக்கட்சியினர் எதிர்பார்ப்பு. திமுகவுக்கு இந்தி எதிர்ப்பு கை கொடுத்தது போல நாம் தமிழர் கட்சிக்கு அதிகாரத்தைக் கைப்பற்ற உதவுமா? என்பது காலத்தின் கையில்!