இலங்கை தமிழருக்கு சிறப்பு திட்டங்கள்-முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் பதில் தந்த ராஜபக்சே மகன்
சென்னை: தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழருக்கான சிறப்பு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை வரவேற்பதாகவும் நாடு திரும்பும் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் அமைச்சருமான நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இலங்கைத் தமிழர் நலன் தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதில், முகாம்களில் உள்ள பழுதடைந்த வீடுகளைப் புதிதாகக் கட்டுதல், கழிப்பிட, குடிநீர், மின்சார வசதிகள் அளித்தல், குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை உயர்வு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத்திறனை மேம்படுத்தும் பயிற்சி அளித்தல், 300 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி உதவி, அகதிகளின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர உதவித்தொகை உயர்வு, எரிவாயு இணைப்பு, அடுப்பு அளித்தல், மாதந்தோறும் 20கிலோ இலவச அரிசி, அனைவருக்கும் கைத்தறி ஆடைகள், போர்வைகள், இலவச சமையல் பாத்திரங்கள் வழங்குதல் ஆகியவை அடங்கும்.

மேலும் இலங்கை அகதிகள் முகாம் என்பது மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புகளுக்கு தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களான மனோ கணேசன், சுமந்திரன் உள்ளிட்டோரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை அகதிகளுக்கு 300 கோடிக்கு மேற்பட்ட நிவாரணங்கள் மற்றும் அகதிகளது இந்திய, இலங்கை குடியுரிமை குறித்து ஆராய குழு நியமனம் ஆகிய இரண்டு அறிவிப்புகளை அவர் செய்துள்ளார். இவை இதற்கு முன்னால் இந்தளவு காத்திரமாக நிகழ்ந்திராத முன்னெடுப்புகள் ஆகும். முகாமிலும், முகாமிற்கு வெளியேயும் வாழும் தமிழர்களின் எதிர்கால நலன் கருதி, குடியுரிமை பிரச்சினை தொடர்பில், சிறுபான்மையினர் நலன் துறை, வெளிநாட்டு வாழ் நலன் துறை, சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், முகாம் தரப்பில் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்ற சிறப்பான யோசனையையும் முதல்வர் தெரிவித்துள்ளார் என பாராட்டியுள்ளார்.

Recommended Video
இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மகனும் இலங்கை கேபினட் அமைச்சருமான நாமல் ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு குறித்து கருத்துகளை பதிவு செய்துள்ளார். அதில், இலங்கை அகதிகள் தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வரவேற்கிறோம். அதேநேரத்தில் 2009-ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய 3567 குடும்பங்களை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே வரவேற்றிருந்தார். இலங்கை திரும்பும் அகதிகளுக்கான பாதுகாப்பை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே உறுதி செய்வார்கள் என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications