நந்தியை விலகியிருக்க சொன்ன சிதம்பரம் நடராஜர்..நந்தனாரை அனுமதித்திருக்கலாம்..சொல்கிறார் பொன்முடி
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தியை விலகியிருக்க சொன்ன நடராஜர், நந்தநாரை உள்ளே அழைத்திருந்தால் இன்றைக்கு அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் தேவையில்லாமல் போயிருக்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வரலாற்று ஆராய்ச்சித் துறை மற்றும் டாக்டர் பழனி G.பெரியசாமி அறக்கட்டளை சார்பில், பின் நகரும் காலம் தமிழக தொல்லியல் ஆய்வுகளை முன் வைத்து என்ற தலைப்பில் சொற்பொழிவு கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொன்முடி
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, வரலாறு என்பது வரலாறாகவே இருக்க வேண்டும். உண்மையான வரலாற்றை கொண்டு வரவேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம் என கூறினார். அகழ்வாராய்ச்சி பணிக்காக 5 கோடியை முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார். ஆவண காப்பகம் வளர்ச்சிக்காக 2022 இல் கையேடு ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

திராவிட நாகரீகம்
ஆரிய நாகரிகத்திற்கு முன்பாகவே இந்தியாவின் தெற்கு பகுதியில் திராவிட நாகரிகம் இருந்தது என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அலெக்சாண்டர் படையெடுத்து வரும்போது தான் ஆரிய திராவிடம் இங்கே வந்தது. அதற்கு முன்பே இங்கே திராவிட நாகரீகம் இருந்தது என்றார்.

சிதம்பரம் நடராஜர் கோவில்
மனித உணர்வை உருவாக்க வேண்டும், சமத்துவம் இருக்க வேண்டும், நீதி வழங்கப்பட வேண்டும் என்பது தான் திராவிட மாடல் என தெரிவித்தார். ஒரு காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உள்ளே பெண்களை அனுமதிக்க மாட்டார்கள். போனாலும் வெளியில் நிறுத்திவிடுவார்கள்.

நந்தனாருக்கு விலகிய நந்தி
கோயில் மூலஸ்தானத்தில் சுவாமி இருக்கும் போது நந்தி நடுவில் இருக்கும். எல்லா கோயில்களிலும் சுவாமிக்கு எதிரே நந்தி சிலை இருக்கும். ஆனால் சிதம்பரம் கோயிலில் மட்டும் தான் நந்தி விலகி இருக்கும். நந்தனார் வழிபட நடராஜர், நந்தியை விலகி இருக்க சொன்னதாக கூறுவார்கள்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
நந்தியை விலகியிருக்க சொன்ன நடராஜர், நந்தநாரை உள்ளே அழைத்திருந்தால் இன்றைக்கு அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் தேவையில்லாமல் போயிருக்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதை எல்லாம் மாற்றி அமைத்து தான் முதலமைச்சர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்தார் என விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications