மாநிலங்களில் கூட்டணி ஆட்சி.. காங்கிரஸ் சொல்லும் மெசேஜ்... திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
சென்னை: மத்தியில் கூட்டணி ஆட்சி அமைவதை போவலே மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிகள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளது திமுகவிற்குக் கொடுக்கப்படும் மெசேஜாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்துள்ளது,
இந்த ஐந்து மாநிலங்களில் அசாம் மாநிலத்தில் மட்டுமே பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. மேற்கு வங்கத்தில் தனது முத்திரையைப் பதிக்க முயல்கிறது. மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு நேரடியாகப் பெரியளவு செல்வாக்கு இல்லை.
காங்கிரஸ் கூட்டணி
தற்போது நிலைமை இப்படி இருப்பதால், இந்த தேர்தலை காங்கிரஸ் கட்சி மிகவும் கவனமாக எதிர்கொண்டுள்ளது. கேரளாவில் காங்கிரஸ் வலுவான எகிர்கட்சியாக உள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலுவாக இல்லை. இதனால் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. புதுச்சேரியிலும் இதே கூட்டணி தொடர்கிறது. அதேபோல அசாம் மாநிலத்தில் இஸ்லாமியக் கட்சியுடனும் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடனும் காங்கிரஸ் கை கோர்த்துள்ளது.
கடந்த கால தவறு
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் தனித்துக் களமிறங்கியதால் அங்குப் படு தோல்வியைச் சந்தித்தது. அதேபோன்ற தவறை மீண்டும் செய்யாமல் இருக்கக் காங்கிரஸ் இந்த முறை ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கிருக்கும் களச் சூழ்நிலையைப் பொறுத்து கூட்டணியை அமைத்துள்ளது.
ப சிதம்பரம்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் எந்தவொரு அரசியல் கட்சியின் கொள்கைகளும் நிலையானதாக இருந்ததில்லை என்று தெரிவித்தார். காலத்திற்கு ஏற்றார்போல கட்சியின் கொள்கைகள் மாறும் என்று தெரிவித்த அவர், விடுதலைக்குப் பின் காங்கிரஸ் கட்சி இடதுசாரி கொள்கைகளை நோக்கி சில காலம் பயணித்ததாகவும் பின்னர், மைய கொள்கை நோக்கி நகர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநிலங்களில் கூட்டணி ஆட்சி
கூட்டணிக்கான தேவைகளை விளக்கிய அவர், தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இரண்டு கூட்டணிகளுக்கு இடையே மட்டுமே போட்டி நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். சில மாநிலங்களில் ஒரு கட்சி மட்டும் பெரும்பான்மையைப் பெற முடியும் என்றாலும், கூட்டணி அரசே அமைக்கப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் ஒருங்கிணைந்த வளர்ச்சி தர முடியும் என்றும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவிற்கு மெசேஜ்
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் ஒரு குறிப்பிட்ட கட்சியைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், இது திமுகவிற்கு காங்கிரஸ் விடுக்கும் செய்தி என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களிலும்கூட காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைவதைப் போலவே மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி தேவை என்று தெரிவித்துள்ளனர்.
2006இல் நடந்தது என்ன
இருப்பினும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது அமைந்ததில்லை. கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலிலும்கூட திமுகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்தே ஆட்சி அமைத்திருந்தது. ஆனால், அப்போதும் கூட அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2016 தேர்தல்
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான இடங்களை ஒதுக்கியதே திமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாததற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. இதனால் இந்த முறை தொகுதிப்பங்கீட்டில் கறார் காட்டிய திமுக, 25 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.
வாய்ப்பு குறைவு
சுமார் 180 இடங்களில் திமுக போட்டியிடுவதால் கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகாது என்று அக்கட்சியினர் நம்பிக்கையில் உள்ளனர். மேலும், கூட்டணி ஆட்சி அமைந்த மற்ற மாநிலங்களிலும்கூட எம்எல்ஏகள் திடீரென்று கட்சி தாவி விடுவதால் கூட்டணி அரசுகள் கவிழ்ந்துள்ளன. இதனால் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி என்பது திமுகவின் கடைசி ஆப்ஷானகாவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.