மாணவி பிரியா உயிரிழப்பு.. இனி யாருக்கும் வரக்கூடாது.. உருவாகுமா தமிழக விளையாட்டு அகாடமி?
சென்னை: மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தார். இதனால் தமிழ்நாட்டின் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்கென பிரத்யேக மருத்துவமனை, பயிற்சி களம் உள்ளிட்டவை அடங்கிய அகாடமியை உருவாக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா. தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட பிரியா, குறுகிய காலத்திலேயே பல சாதனைகளைப் படைந்து வந்தவர்.
சென்னையில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பயிற்சியின் போது இவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அறுவை சிகிச்சை செய்தும் அவரது கால் வலி குறையாததால் மேல் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியா சேர்க்கப்பட்டார்.
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்.. தண்டனை, இழப்பீட்டால் ஈடு செய்ய முடியாது - கே.பாலகிருஷ்ணன்
பிரியா உயிரிழப்பு
அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பதால் காலை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர். தொடர்ந்து பிரியாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கவன குறைவு
மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் மாணவி பிரியா உயிரிழந்தார் என்பதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதனிடையே தவறான சிகிச்சை அளித்த இரு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவி பிரியாவின் உயிரிழப்பு தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காயம்?
தமிழகத்தில் உள்ள மருத்துவத்துறை குறித்து பெண் ஒருவர் நீயா நானாவில் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டு உள்ள சூழலில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவி பிரியாவுக்கு ஏற்பட்ட Ligament Tear காயம் என்பது கால்பந்து விளையாடும் 100 நபர்களில் 50க்கும் அதிகமானோருக்கு ஏற்படக்கூடிய காயமே.
விளையாட்டு வீரர்கள் கோரிக்கை
தவறான சிகிச்சை அளித்த இரு மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ள தமிழக அரசு, இனி எந்த விளையாட்டு வீரருக்கும் இதுபோன்ற நிலை உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது. தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது.
மறுவாழ்வு மையம்
அதில் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை வழங்கவும், காயத்திற்கு பிறகு வீரர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும் முறையான மருத்துவர்கள் மற்றும் விளையாட்டு துறையில் பணியாற்றிய நபர்களை உள்ளடக்கி காயத்திற்குப் பின் மறுவாழ்வு அகாடமி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
தேசிய கிரிக்கெட் அகாடமி
கிரிக்கெட்டில் காயம் ஏற்பட்டால், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மட்டுமே சிகிச்சை செய்யப்பட்டு, மீண்டும் பயிற்சி கொடுக்கப்பட்டு, வீரர்கள் மீண்டும் தயாராகி வருவர். அதேபோல் தமிழகத்தில் தேசிய அளவில் விளையாடி வரும் வீரர்களுக்கு பிரத்யேகமாக காயத்திற்கு பின் தயாராவதற்கான அகாடமி ஒன்றை உருவாக்க வேண்டும்.