நீட் தேர்வு.. திமுக அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் திமுக அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக அவர் டிவிட்டரில், திமுக அரசின் மீது சந்தேகத்தையும் விமர்சனத்தையும் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியுள்ளதாவது, "நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் கடந்த மாதம் மத்திய அரசு எழுப்பிய சந்தேகங்கள் குறித்து தி.மு.க அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் மூடி மறைத்தது பொதுமக்களிடம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதிலளித்த பிறகே இதுகுறித்து வெளியில் தெரிய வந்திருப்பதால், நீட் விவகாரத்தில் பழனிசாமி அரசைப் போல ஸ்டாலின் அரசும் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதன் பிறகும்கூட தி.மு.க அரசு இப்பிரச்னையைப் பூசி மெழுகதான் முயற்சிக்கிறதே தவிர, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம் என்று தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் செய்த தில்லுமுல்லு சத்தியம் அவர்களுக்கு வேண்டுமானால் மறந்து போயிருக்கலாம்; தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் 'தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சட்டம்' தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆளுநர் இதை குடியரசுத் தலைவிரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைத்து உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய சுகாதாரத் துறையின் கருத்துகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று மக்களவையில் தெரிவித்து இருந்தது.
Recommended Video
இது தொடர்பாக நேற்று பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் மசோதா குறித்து மத்திய அரசு 7 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரி உள்ளதாக கூறியிருந்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு உள்ள அதிகாரம் என்ன?, இந்த மசோதா மத்திய அரசின் அதிகார வரம்பில் வருகிறதா?, தேசிய மருத்துவ ஆணைய சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு இது முரண்பட்டு அமைந்துள்ளதா? என இந்த கேள்விகள் இருந்ததாகவும் குறிப்பிட்ட அமைச்சர் இந்த 7 கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் பேட்டியில் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications