நீட் தேர்வு.. அரசு மவுனத்தால் தமிழ்நாடு மாணவர்கள் பாதிப்பு- எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றச்சாட்டு
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு நீண்டகாலமாக மவுனம் காத்ததால் மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாக மாறி விட்டது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
செப்டம்பர் 12ம் தேதி மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்த அளவில் நீட் தேர்வு நடைபெற விட மாட்டோம் என்பது திமுக அரசின் வாக்குறுதியாக இருந்துவருகிறது. தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இதைக் கூறி வருகிறார்கள்.

அதிமுக வலியுறுத்தல்
அதேநேரம் இன்னமும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறவில்லை என்பதால் இதுபற்றி மாணவர்களை குழப்பாமல் பதில் அளிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மாணவர்கள் தயாராக அறிவிப்பு
அப்போது அமைச்சர் அளித்த பேட்டியில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசின் சட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் என்ற போதிலும் கூட, தமிழ்நாடு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று அறிவித்தார். அரசு சார்பிலான பயிற்சி வகுப்புகளில், மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

மருத்துவ கனவு கேள்விக்குறி
இந்த நிலையில் தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது டுவிட்டர் பக்கம் வாயிலாக நீட் தேர்வு பற்றி ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?"என மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

இட ஒதுக்கீட்டை பின்பற்றுங்கள்
எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு, அதிமுக அரசு செயல்படுத்திய "நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல்,தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அம்மா அரசு அளித்தது போல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கல்வியாளர்கள் கருத்து
இதனிடையே கொரோனா நோய் பரவல் காரணமாக நீட் தேர்வு நடத்தக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கிறார். மூன்றாவது அலை காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்றும், எனவே இந்த தேர்வை நடத்தக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் உரிய பயிற்சி பள்ளிகள் மூலமாக மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நீட் தேர்வு விலக்கு பற்றி உறுதியான அறிவிப்பு வெளியாகாத நிலையில் மாணவர்கள் தயாராக இருப்பதுதான் அவருக்கு நல்லது என்று அவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications