சித்தா, ஆயுர்வேத படிப்பு.. மருத்துவ கனவு மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய அறிவிப்பு
சென்னை: ஏற்கனவே எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு உள்ள நிலையில், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டே நீட் தேர்வு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே5ம் தேதி நடந்தது.
இதனிடையே எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளை தவிர சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இப்போது மத்திய ஆயுஷ் அமைச்சகம், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளை போன்றே சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதனால் சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டே நீட் தேர்வு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக சுகாதராத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டுமே எந்தவிதமமான மருத்துவ படிப்புகளுக்கும் சேர முடியும், இந்தாண்டு நீட் தேர்வு எழுதாதவர்கள், எந்தவிதமான மருத்துவ படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க முடியாது.
இதனிடையே இந்தாண்டில் இளங்கலை மருத்துவ படிப்பில் 3,350 இடங்களும், முதுகலை படிப்பில் 508 இடங்களும் கூடுதலாக கிடைக்க உள்ளது என அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.