பாஜக கேட்கும் போது நாங்க 5 கேட்க கூடாதா? மேயராக முரண்டு பிடிக்கும் காங்கிரஸ், “கை” கொடுக்காத திமுக
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக கேட்பது போலவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 4 முதல் 5 மேயர் சீட்டுகள் வரை கேட்பதாகவும் அதற்கு திமுக உடன்படாத நிலையில் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக 4 முதல் 5 மேயர் இடங்களை கேட்டு அடம் பிடித்து வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக கேட்பது போலவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 4 முதல் 5 மேயர் சீட்டுகள் வரை கேட்பதாகவும் அதற்கு திமுக உடன்படாத நிலையில் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
இந்த நிலையில் விசிக உள்ளிட்ட கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நிறைவு செய்துள்ள நிலையில் காங்கிரசுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அமைச்சர் பெரியகருப்பன் விட்டுக்கொடுக்காத நிலையில் மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என தகவல் வெளியானது. மாநில அளவிலான பேச்சுவார்த்தைகளின் போது 21 மாநகராட்சிகளில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து மாநகராட்சிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு திமுக தரப்பு அசைந்து கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

குறைந்தது 3 சீட்டுகள்
குறைந்தது 3 மேயர் இடங்களை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 22 மாநகராட்சிகளையும் கைப்பற்ற திமுக முடிவு செய்திருப்பதாகவும் வேண்டுமென்றால் இரண்டு அல்லது மூன்று துணை மேயர் பதவிகளை காங்கிரசுக்கு கொடுக்க முன்வந்து இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தும் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு மரியாதை தமிழகத்தில் உள்ள நிலையில் குறைந்தது மூன்று இடங்களை பெற்றால் தான் நன்றாக இருக்கும் என அவர் விரும்புகிறார்.

அழகிரி அதிருப்தி
இதையே பல காங்கிரஸ் மூத்த தலைவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில் திமுகவின் முடிவால் கே எஸ் அழகிரி சற்றே அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது, இருந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்படியாவது திமுகவிடம் பேசி சமாளித்து விடலாம் என சிரித்த முகத்தோடு வலம் வருகிறாராம். அதிமுக கூட்டணியில் பாஜக வுக்கு 4 சீட்டுகள் ஒதுக்க அவர்கள் கோரிக்கை விடுத்தும் அதிமுக ஒத்துக் கொள்ளாத நிலையில் பாஜகவுக்கு கொடுப்பது போல காங்கிரஸ் கட்சிக்கு 4 சீட்டுகள் கொடுத்தால் மற்ற கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு ஒரு சீட்டாவது வேண்டும் என கேட்பார்கள்.

நாளை முடிவு
இதனால் கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்படும் என்பதால் அனைத்து மேயர் பதவிகளையும் திமுகவினரை வைத்து பெற்றுக்கொண்டு துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்கலாம் என திமுக மூத்த நிர்வாகிகள் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மாலைக்குள் அனைத்து கட்சிகளின் இறுதி பட்டியல்களும் வெளியாகும் நிலையில் இதற்கான விடை கிடைக்கும் என கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications