ஹேப்பி நியூர் இயர் 2023..! சென்னையில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!
சென்னை : சற்று முன்னர் 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 2023ஆம் ஆண்டு பிறந்துள்ளது. 2023ஆம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டை மக்கள் மிகுதியான உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிறையட்டும் என ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்தப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றுள்ளனர். புத்தாண்டை கொண்டாட பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் முக்கிய நகரங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நியூ இயர் 2023
சற்று முன்னர் 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 2023ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகெங்கிலும் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளன. அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், காமராஜர் சாலையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிறந்தது புத்தாண்டு
புதிய ஆண்டை முதன்முதலாக வரவேற்றது, பசிபிக் நாடான கிரிபாட்டி. அதைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் கழித்து நியூசிலாந்து புத்தாண்டைக் கொண்டாடியது. தொடர்ந்து, உலக நாடுகள் பலவற்றிலும் புத்தாண்டு மிகச் சிறப்பான முறைகளில் வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சற்று முன்னர் இந்தியாவில் புத்தாண்டு பிறந்துள்ளது. சென்னையில் காமராஜர் சாலையில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு பொதுமக்கள், இளைஞர்கள் கூடி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

வாணவேடிக்கை
சென்னை உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். கலை நிகழ்ச்சிகளுடன் ஆடியும் பாடியும் இந்தப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், இன்னும் சற்று நேரத்தில் பொதுமக்கள் கலைந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசம்பாவிதங்கள் அற்ற புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைவர்கள் வாழ்த்து
ஆங்கிலப் புத்தாண்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம். புத்தாண்டே வருக... புதுவாழ்வு தருக...இணையற்ற இளைய ஆற்றல் வெல்க." என புத்தாண்டை வரவேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications