நீலகிரி, கோவை, தேனியில் 7ஆம் தேதி முதல் கனமழை - வானிலை மையத்தின் ஜில் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழையும் 7ஆம் தேதி முதல் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சற்றே ஓய்ந்துள்ள நிலையில் வரும் 7ஆம் தேதி முதல் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர்,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதம் துவங்கினாலும் விட்டு விட்டு பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்துள்ள மழையால் அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரியில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும், நீலகிரி கோயம்புத்தூர் ,சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் வளைகுடாவில் கச்சா எண்ணெய் கப்பல் கடத்தல்- ஈரான் மீது சந்தேகம்- பதற்றத்தில் ஹோர்முஸ் ஜலசந்தி!
மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்கள்
6ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
இரண்டு நாட்கள் கனமழை
7 மற்றும் 8ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர் ,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை பெய்ய வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கு அறிவிப்பு
இன்று முதல் வருகின்ற 8ம் தேதி வரை தென் மேற்கு வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்
மழைக்காலமாக இருந்தாலும் பல மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவுகிறது. மதுரையில் கடந்த சில நாட்களாவே வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்றைய தினம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர், தூத்துக்குடியில் 38 டிகிரியும், திருச்சி, நெல்லை, கடலூர், உள்ளிட்ட பல மாவட்டங்களில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.