நீலகிரி, கோவை, திருப்பூரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு - ரெட் அலெர்ட் கவனம் மக்களே
வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதன் காரணமாக தமிழகத்தில் 29ஆம் தேதி கோவை, திருப்பூர், தென்காசி, 30ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒன்பது மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதன் காரணமாக வரும் 29, 30ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் கோவை, திருப்பூர், தென்காசி, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப்பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் அனந்தபுரத்தில் 10 செ.மீ அளவு மழையும் கள்ளக்குறிச்சியின் அரியலூரில் 8 செ.மீ அளவு மழையும் மூங்கில்துறைப்பட்டில் 6 செ.மீ மழை அளவும் பதிவாகியுள்ளது. விருதுநகரில் நேற்று மாலை கொட்டிய மழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது.
இந்த நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இதர மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
நாளை 27ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதன் காரணமாக வரும் 30ஆம் தேதியன்று நீலகிரி, கோவை, திருப்பூரில் இடி மின்னலுடன் கூடிய அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தேனி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை வங்கக் கடல், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications