''வேட்டியை மடிச்சு கட்டுனா எல்லாம் சரியாகிடுமா''.. மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்த நித்தி.. வைரல் வீடியோ
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதுவும் சென்னையை பேய் மழை புரட்டி போட்டு விட்டது என்றே கூறலாம்.
Recommended Video
ஒரு வாரத்துக்கு முன்பு சென்னையும், அதன் புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் சாலை போக்குவரத்து, ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மழை குறைந்து விட்டாலும் வெள்ளம் இன்னும் வடியாத நிலையே நீடிக்கிறது.
தீங்கு நேர்ந்துவிட்டது.. கவலையாக இருக்கிறது.. ட்வீட்டரில் கவலைப்பட்ட பிடிஆர்.. யாரை சொல்கிறார்?
முதல்வர் ஸ்டாலின் தொடர் ஆய்வு
இதேபோல் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. மழை, வெள்ள மீட்பு பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டது. சென்னையின் வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 5 நாட்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கன்னியாகுமரி சென்றும் பாதிப்புகளை அவர் ஆய்வு செய்தார்.
நித்தியானந்தா கிண்டல்
இதனால் தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் கைலாசா நாட்டில் இருக்கும் நித்தியானந்தா முதல்வர் மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வெள்ளம் தொடர்பான மீம்ஸ் ஒன்றை முகநூலில் பார்த்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னாடி தமிழ்நாடு முதல்வராக இருந்தவர் வேட்டியை மடித்துக் கொண்டு சென்னை வெள்ளத்தைப் பார்வையிடுகிற மாதிரியும், அதற்கு பிறகு முதல்வரானவரும் வேட்டியை மடித்துக் கொண்டு சென்னை வெள்ளத்தைப் பார்வையிடுவது மாதிரி மீம்சில் இருந்தது
பிரச்சினை முற்றி போய்விட்டது
இந்த மாதிரி வேற வேற முதல்வர்கள் வேட்டியை மடித்துக் கொண்டு எத்தனை முதல்வர்கள் வந்துபோனாலும், சென்னை வெள்ளம் பிரச்சினை முடியவில்லை. அதாவது அடிப்படையான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. மழை வெள்ளத்தை பெரிய பெரிய ஆளுங்க வந்து பார்வையிட்ட உடனே, நம்முடைய கவனம் திசை மாறிவிடுகிறது. இதுவும் ஒரு பிரச்சினை. இந்த மீம்ஸை பார்க்கும்போது, இத்தனை ஆண்டு காலமாக இந்த பிரச்சினை முற்றி போய்விட்டது
நம்ம வீட்டில் தண்ணி வீடு கட்டியுள்ளது
மழை அடிக்கிற மாதிரி அடிக்கும், நம்ம அழுகிற மாதிரி அழணும். நிவாரண உதவி நடக்கிற மாதிரி நடக்கும். இது அடுத்த வருஷமும் நடக்கும். அவ்வளவுதான். எங்கோ இயற்கையோடு நமக்கு இருக்கும் தொடர்பை இழந்துவிட்டோம். இதுதான் பிரச்சினை. தண்ணியோட வீட்டில் நாம் வீடு கட்டியதால், இப்போது நம்ம வீட்டில் தண்ணி வீடு கட்டியுள்ளது. இவ்வாறு நித்தியானந்தா கூறியுள்ளார். காவல்துறையால் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தானே கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு இருப்பதாக கூறி இருந்தார் அங்கு இருந்தபடி அவர் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.