அக்.15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடியாது.. நிரந்தர தீர்வே எங்கள் நோக்கம்.. அமைச்சர் கேஎன் நேரு!
சென்னை: வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைய வாய்ப்பில்லை என்று அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை தங்கசாலையில் உள்ள அரசு மைய அச்சகம் அருகில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து ரூ.1.91 கோடி மதிப்பில், சென்னை ஏழு கிணறு மலையப்பன் தெரு கழிவுநீரகற்று நிலையத்திலிருந்து புதிய கழிவுநீர் உந்து குழாய் பதிக்கும் பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.
அத்துடன், ரூ.1.94 கோடி மதிப்பில், சென்னை, வ.உ.சி சாலையில், ஜட்காபுரம், வால்டாக்ஸ் ரோட்டில் மேம்படுத்தப்பட்ட கழிவுநீரகற்று நிலையத்தை திறந்து வைத்தனர். ரூ.50 லட்சம் மதிப்பில் சென்னை, ஏழுகிணறு, கோவிந்தப்பா தெருவில் புதிய அலுவலக கட்டிடங்களையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
டுவிஸ்ட்.. சசிதரூர் “ஷாக்” - கழற்றிவிட்ட “ஜி 23”.. நேரு குடும்ப சாய்ஸான கார்கேவை ஆதரிப்பது ஏன்?
கேஎன் நேரு பேட்டி
இதனைத்தொடர்ந்து அமைச்சர் கேஎன் நேரு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இன்னும் ஒரு சில இடங்களில் இணைப்பு மட்டுமே தாமதமாகியுள்ளது. ஆனால் அந்த பகுதிகளிலும் மழைநீர் செல்வதற்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணிகள் முடிய தாமதம்
எங்கெல்லாம் மழைநீர் வடியால் இருக்கிறதோ, அங்கெல்லாம் மோட்டார் பம்ப் வைத்து எடுத்து வருகிறோம். மழைநீர் வடிவால் பணிகள் முடிய தொடர்ந்து ஒன்று முதல் ஒன்றரை மாதம் ஆகும். அதற்குள் மழை பெய்தால், மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
வடசென்னையில் நீர் தேங்குமா?
தொடர்ந்து வடசென்னை பகுதிகளில் மழைநீர் தேங்குவது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, வடசென்னை பகுதிகளில் வடிகால் பணிகள் முடிவடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அங்கு தண்ணீர் கொசஸ்தலை ஆறுதான் காரணம். அங்கு தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர்ப்புற பகுதிகளில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நிரந்தர தீர்வு காண ஏற்பாடு
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 முதல் 10 இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பெரும்பாலான பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது சில சிரமங்கள் ஏற்பட்டாலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மழைநீர் தேங்காமல் நிரந்தர தீர்வு காண பணிகள் செய்யப்படுகிறது. சென்னையின் முக்கியமான பகுதிகளில் 80 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளது.
15க்குள் பணிகள் முடிய வாய்ப்பில்லை
அதேபோல் மழைக் காலத்திற்கு சென்னையில் 800 சாலைகள் போட கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. 15ம் தேதிக்கும் பணிகள் முடிவடைய வாய்ப்பில்லை. பல்வேறு இணைப்புகள் இருப்பதால், தாமதம் ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஒருங்கிணைப்பு குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் 161 இடங்களில் மோட்டார் பம்ப்-கள் பொறுத்தப்பட்டுள்ளது. அதனால் தண்ணீர் தேங்காது என்று தெரிவித்தார்.