'பீரியட்' நேரங்களில் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு? - மத்திய அரசு அளித்த பதில் என்ன தெரியுமா?
டெல்லி : அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு 'மாதவிடாய்' நேரங்களில் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் சிலவற்றில் இந்த விடுப்புகள் சமீபகாலமாக அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், மாதவிடாய் விடுப்பு போன்ற விதிகளை மத்திய அரசு செயல்படுத்துகிறதா என லோக்சபாவில் கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

விழுப்புரம் எம்.பி
விழுப்புரம் எம்.பி டி.ரவிக்குமார் லோக்சபாவில், "மாதவிடாய் சலுகைகள் மசோதா, 2018-இல் வழங்கப்பட்ட மாதவிடாய் விடுப்பு போன்ற விதிகளை அரசாங்கம் செயல்படுத்துகிறதா? தனியார் அலுவலகங்களில் இந்தக் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்கிறதா? பொதுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறதா?" உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்
அவரது கேள்விக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். அவரது பதிலில், "மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும் மத்திய அரசுப் பணிகளுக்கான விடுப்பு விதிகள், 1972இல் மாதவிடாய் விடுப்புக்கான விதிமுறைகள் இல்லை. மேலும், இந்த விதிகளில் அத்தகைய விடுப்பைச் சேர்ப்பதற்கு தற்போது எந்த முன்மொழிவும் இல்லை.

மாதவிடாய் விடுப்பு இல்லை
அரசு பெண் ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு, அசாதாரண விடுப்பு, கூடுதல் சாதாரண விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, மாற்றியமைக்கப்பட்ட விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மருத்துவச் சான்றிதழில் விடுப்பு, நிலுவையில்லாத விடுப்பு என பல்வேறு வகையான விடுப்புகள் கிடைக்கின்றன. மாதவிடாய் விடுப்பை சேர்க்கும் திட்டம் எதுவும் தற்போது ஆராயப்படவில்லை.

நாப்கின்கள்
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 2011ஆம் ஆண்டு முதல் 10-19 வயதுக்குட்பட்ட பருவப் பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், இளம்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களின் பேக், அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர் (ஆஷா) மூலம் மானிய விலையில் ஒரு பேக்கிற்கு ரூபாய் 6 என வழங்கப்படுகிறது.

மலிவு விலையில் நாப்கின்கள்
மேலும், மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் நல்ல தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 8,700க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி கேந்திராக்கள் அமைக்கப்பட்டன, அவை ஆக்ஸோ-மக்கும் சானிட்டரி நாப்கின்களை ரூ.1 என்ற விலையில் வழங்கப்படுகிறது எனப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications